Last Updated : 18 May, 2016 11:53 AM

 

Published : 18 May 2016 11:53 AM
Last Updated : 18 May 2016 11:53 AM

பூச்சிகளை விழுங்கும் செடி!

பூச்சிகளை சிறு உயிரினங்கள் சாப்பிடுவதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பூச்சிகளை உண்ணும் தாவரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படி ஒரு தாவரம் உள்ளது. அதன் பெயர் வீனஸ் ஃப்ளைட்ராப்!

வட அமெரிக்காவில் இந்தத் தாவரம் உள்ளது. ஈரமான சதுப்பு நிலப் பகுதிகளில் இவை வளர்கின்றன. இவற்றின் இலைகள் 3 செ.மீ. முதல் 12 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது. இலைகளின் அடிப்பாகம் பச்சையாகவும் மேல் பாகம் சிவப்பாகவும் இருக்கும். இலையை இரண்டாக மடிக்கும்படி இருக்கும். ஓரங்களில் நீண்ட முட்கள் வரிசையாக நீட்டிக்கொண்டிக்கும். இலையின் நடுப்பகுதியில் ஜீரணச் சுரப்பிகள்கூட உள்ளன.

இப்படி அழகான சிவப்பு இலைகளைப் பார்த்ததும் பூச்சிகள் ஆவலோடு அருகில் வருகின்றன. இலை மீது அமர்ந்தவுடன், பூச்சியைப் பிடிப்பதற்குத் தயாராகிவிடுகிறது. பூச்சி ஊர்ந்து போகும்போது, இலையில் உள்ள உணர் முடிகளிலிருந்து மின் சமிக்ஞைகள் வெளிவந்து, இலையை மூட வைத்துவிடுகின்றன. பூச்சி சுதாரிப்பதற்குள் மிக வேகமாக இலை மூடிவிடும். இலையின் இரு பக்கங்களிலும் உள்ள முட்கள் ஒன்றோடு ஒன்று இறுக்கிப் பிடித்துக்கொள்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகப் பூச்சியை இறுக்கிக்கொண்டே போனதும், ஒருகட்டத்தில் பூச்சிகள் இறந்து போய்விடுகின்றன.

இலையில் உள்ள ஜீரணச் சுரப்பிகளில் இருந்து வெளிவரும் நீர், பூச்சியை மெதுவாக ஜீரணம் செய்துவிடுகிறது. பூச்சியின் உடல் ஜீரணமாவதற்கு 5 முதல் 10 நாட்கள்வரை ஆகும். அதுவரை இலை மூடியே இருக்கும். செரிக்கப்படாத பூச்சியின் பாகங்கள் இலை திறந்த பின்னர், வெளியே வந்துவிடும். இலை இறைச்சியை உண்ணுவதில்லை. உடலில் உள்ள நீர்ச் சத்தை மட்டுமே உறிஞ்சிக்கொள்கிறது.

ஓர் இலை அதிகபட்சம் 3 முறையே பூச்சிகளைப் பிடிக்க முடியும். மூன்றாவது தடவை பூச்சியைப் பிடித்த பிறகு, இலை திறப்பதே இல்லை. சிறிது நாட்களில் இலை பழுத்து, உதிர்ந்துவிடும். பொறியைப் போல இலை செயல்படுவதால் இவற்றுக்கு ‘ஃப்ளைட்ராப்’ என்று பெயர். ரோமானியக் கடவுள் வீனஸையும் பெயரோடு சேர்த்துக்கொண்டனர்.

குச்சி விழுந்தால் என்ன ஆகும்?

சிலந்தி, ஈக்கள், கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளி, அட்டை போன்றவை இலைக்கு வந்தால் உயிர் தப்பி போக முடியாது. குச்சி, கல் போன்ற உயிரற்ற பொருட்கள் இலை மீது விழுந்தாலும், இலை தானாக மூடிக்கொள்ளும். ஆனால் அவற்றை ஜீரணம் செய்ய முடியாமல், 12 மணி நேரங்களுக்குப் பிறகு இலையை விரிக்கும். காற்றில் குச்சியும் கல்லும் வெளியே விழ வேண்டும். குறும்புக்காக ஒரு பென்சிலை இலைக்குள் வைத்தாலும் அதை எடுப்பதற்கு 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

தாவரம் ஏன் பூச்சியைச் சாப்பிடுகிறது?

வீனஸ் ஃப்ளைட்ராப் வளரும் நிலத்தில் தேவையான சத்துகள் கிடைப்பதில்லை. பரிமாண வளர்ச்சியில் காலப்போக்கில் சத்துகளைப் பெறுவதற்கான பண்புகள் உருவாக ஆரம்பித்தன. இலைகளை நாடி வரும் பூச்சிகளிலிருந்து தங்களுக்குத் தேவையான சத்துகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தன. இப்படித்தான் வீனஸ் ஃப்ளைட்ராப் உட்பட பல பூச்சி உண்ணும் தாவரங்களும் அசைவத்துக்கு மாறின.

புதிய கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் உள்ள வுர்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வீனஸ் ஃப்ளைட்ராப் தாவரத்தைப் பற்றி புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். பூச்சியின் முதல் தொடுதலில் இலையில் உள்ள ஜீரண நீர் தயாராகிறது. அடுத்தடுத்த தொடுதல்களில் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்து, ஐந்தாவது தொடுதலில் பூச்சியைப் பிடித்துவிடுகிறது. இலையின் இந்தப் பூச்சி வேட்டை உத்தியை ஆராய்ந்தபோது, பொதுவாகத் தாவரங்களுக்கு இருக்கும் தற்காப்பு அம்சங்களே, வீனஸ் ஃப்ளைட்ராப்புக்கும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

விலங்குகள் இலைகளைச் சாப்பிடாமல் இருப்பதற்காகச் சில தாவரங்கள் முட்களைப் பெற்றுள்ளன. சில தாவரங்கள் மோசமான வாசனையை வெளியிடுகின்றன. அதே போலத்தான் வீனஸ் ஃப்ளைட்ராப் செடிகளும் தங்களைத் தாக்க வரும் பூச்சிகளை எதிர்க்க ஆரம்பித்தன. காலப்போக்கில் இந்தப் பண்பு மரபணுவில் பதிந்து, எதிரியை இரையாக மாற்றும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சிப் பெற்றுவிட்டது என்கிறார்கள்.

இப்படியும் ஒரு தாவரம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x