Last Updated : 23 Mar, 2016 12:14 PM

 

Published : 23 Mar 2016 12:14 PM
Last Updated : 23 Mar 2016 12:14 PM

டைனோசர்கள் பதித்த காலடித் தடங்கள்!

நாம் வாழும் இந்த உலகில் ஒரு காலத்தில் மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஆட்சி செய்து வந்தன. 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, 16 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தன. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இவை முழுவதும் அழிந்து போய்விட்டன.

உலகம் முழுவதுமே டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. அவற்றில் அமெரிக்காவுக்கு முக்கிய இடமுண்டு. இங்குள்ள கொலராடோ மாகாணத்தில் ‘மோரிசன் டைனோசர்’ என்ற பாறை உச்சி மிகப் பிரபலமானது. 1877-ம் ஆண்டு ஆர்தர் லேக்ஸ் என்பவர் இதனைக் கண்டுபிடித்தார்.

இங்கே பல டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. நீண்ட கழுத்தும், நீண்ட வாலும், கூர்மையான முதுகும் கொண்ட ‘அபடோசாரஸ்’, நீண்ட கழுத்தும், நீண்ட வாலும், தட்டையான முதுகும் கொண்ட ‘டிப்லோடோகஸ்’, சின்னத் தலையும், குண்டு உடலும், முதுகில் தட்டையான முட்களும் கொண்ட ‘ஸ்டெகோசாரஸ்’, பெரிய தலை, கூர்மையான பற்கள், 2 சிறிய முன்னங்கைகள் கொண்ட ‘அல்லோசாரஸ்’ போன்றவை இங்கே முதலில் கண்டறியப்பட்டன.

ஸ்டெகோசாரஸ், அபடோசாரஸ் எலும்புகள் பாறைகளில் படிமங்களாக மாறியிருக்கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன உயிரினங்களின் எலும்புகளை இன்றும்கூடத் தொட்டு உணர்ந்துகொள்ளலாம் என்பது ஆச்சரியமான விஷயம்!

இந்த இடத்தில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது. 1937-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சாய்வான பாறைகளில் நூற்றுக்கணக்கான டைனோசர்களின் காலடித் தடங்கள் புதைபடிமங்களாக இருக்கின்றன. இவை தாவரங்களைச் சாப்பிட்டு வாழ்ந்த ‘இகுவானோடன்’ என்ற டைனோசரின் காலடித் தடங்கள். இந்தத் தடங்கள் நெருப்புக்கோழி அளவுக்கு உள்ளன. 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் வட பகுதிக்கும் தென் பகுதிக்கும் கடற்கரைகளில் அலைந்து திரிந்த டைனோசர் இது.

14.5 20.1 கோடி ஆண்டுகளுக்கு இடையில் இன்றைய கொலராடோ பகுதியில் மெதுவாக ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. மிகப் பெரிய டைனோசர்களில் ஒன்று சாரோபோட். நீண்ட கழுத்தும் நீண்ட வாலும் கொண்ட 200 அடி உயர டைனோசர். இவற்றின் எடை சுமார் 100 மெட்ரிக் டன்! தாவரங்களைச் சாப்பிட்டு வாழ்ந்தவை. சாரோபோட் டைனோசர்கள் இந்த ஆற்றிலேயே வாழ்ந்து, மடிந்தன. ஆற்றின் மண், மணல் பகுதிகளில் இவற்றின் எலும்புகள் புதை படிமங்களாக இருக்கின்றன.

பின்னர் கிரெடேசியஸ் காலத்தில் கிழக்கு கொலராடோ நதி கடலுக்குள் மூழ்கிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் ‘இகுவானோடன்’ டைனோசர்கள் இங்கே வசித்தன. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடல் வற்றியது. லாராமைட் ஒரோஜெனி என்ற தட்டுகள் நகர்ந்தபோது, மலைகளைத் தோற்றுவித்தன. அந்த மலைகளின் பாறைப் பகுதிகள்தான் இந்த மோரிசன் பாறை உச்சிகள். மலைகள் தோன்றியபோது கடல் படுகையிலிருந்த புதைபடிமங்கள் எல்லாம் வெளியே வந்துவிட்டன.

பல்வேறு விதமான டைனோசர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி, வரலாற்று மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ‘மோரிசன் ஃபாசில் ஏரியா நேஷனல் லேண்ட்மார்க்’ என்ற இந்தப் பூங்காவைப் பார்வையிடுவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானவர்கள் வருகிறார்கள். இதுவரை ஓவியங்களில் பார்த்த டைனோசர்களை, நிஜ டைனோசர்களின் புதைப் படிமங்கள் மூலம் தொட்டும், உணர்ந்தும் பார்த்துக்கொள்கிறார்கள். இங்கே 1.5 மைல் தூரத்துக்கு 15 டைனோசர்களின் புதை படிமங்களைப் பார்வையிடலாம். டைனோசர்களின் கண்காட்சியையும் கண்டு ரசிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x