Published : 14 Jan 2015 01:44 PM
Last Updated : 14 Jan 2015 01:44 PM

பாப்பா பாடும் பாட்டு…!

டி.வி.க்களில் உங்களைப் போன்ற குட்டீஸ்கள் நிறைய பேர் பாட்டுப் பாடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சினிமாவில் பாட்டு பாடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டிப் பொண்ணை உங்களுக்குத் தெரியுமா? பிசாசு படத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்திக் கொண்டு ஒரு பாப்பா ‘போகும் பாதை தூரமில்லை…, வாழும் வாழ்க்கை பாரமில்லை…’ ஒரு பாட்டுப் பாடுமே. அதைக் கேட்கும்போது நமக்கு ரொம்பவே பாவமாக இருந்தது இல்லையா? உருக்கமான அந்தக் குரலோட சொந்தக்காரி வேறு யாருமில்லை, உத்தராதான் அவர். சைவம் படத்திலும் இவர் பாடியிருக்கிறார். இந்தச் சின்ன வயசிலேயே ஸ்கூல், மியூசிக் கிளாஸ், சினிமாவில் பாட்டு வாய்ப்புகள் என சுத்திசுத்தி ரவுண்டு அடிக்கிறார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உத்தரா 5-ம் வகுப்பு படித்துவருகிறார். நான்கு வருடமாகக் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டுவரும் உத்தரா, தினமும் ஒரு மணி நேரம் சங்கீதம் பயிற்சி செய்கிறார். 2 மணி நேரம் படிக்கிறார். அப்புறம் கொஞ்சம் விளையாடுகிறார். சரி, உத்தரா எப்படி பாட ஆரம்பித்தார்? “எனக்கு பாடறதுன்னா ரொம்ப இஷ்டம். அடிக்கடி பாடிக்கிட்டே இருப்பேன். இப்படித்தான் எனக்கு பாட்டு மேலயும், பாடுறதிலும் விருப்பம் வந்துச்சு” என்று ராகம் பாடுகிறார் உத்தரா.

ஜி.வி.பிரகாஷ்தான் உத்தராவை சினிமாவில் பாட வைக்க முடிவு செய்தார். சைவம் படத்தில்தான் இவர் முதலில் பாடினார். “அழகே அழகு” படத்தையும், பாடலையும் நிறையவே விளம்பரம் செய்ததால், உத்தரா பாடிய பாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

சரி, சினிமாவில் பாடினால் ஸ்கூல்ல திட்டுவார்கள் என்று சொல்வார்கள் இல்லையா? உத்தரா ஸ்கூலில் என்ன சொல்கிறார்கள்? “ஸ்கூல்ல ரொம்ப ஹேப்பி. என்னை பாராட்டினாங்க. முடிஞ்ச வரைக்கும் ஸ்கூலுக்கு லீவு போடாம போய்விடுவேன். திடீர்னு ரெக்கார்டிங் இருந்துச்சுன்னா வர முடியலைன்னு கடிதம் எழுதி, ஸ்கூலுக்கு அனுப்பிடுவேன். அவங்களும் என்னை புரிஞ்சுகிட்டு, அனுமதியும் தந்துடுவாங்க” என்று முகத்தில் புன்னகை பூக்கக் கூறுகிறார் உத்தரா.

பாடகி ஆக வேண்டும் என்பதுதான் லட்சியமா என்று உத்தராவிடம் கேட்டால், “ஆமா, வளர்ந்து பெரியவ ஆனவுடன் ஒரு நல்ல பாடகி ஆகணும்னு ரொம்ப ஆசை. அதுமட்டுமில்ல, நிறைய பேருக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்கணும்” என்று இப்போதே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் உத்தரா.

தற்போது தெலுங்கில் வர உள்ள ‘சைவம்’ படத்திலும் உத்தரா பாடுகிறார். இதில் தாத்தா பேத்தி பாடுவது போல காட்சி வைத்திருக்கிறார்கள். நிறைய திறமைகள் இருந்தாலும். சினிமாவில் நடிக்க உத்தராவுக்கு ஆர்வம் கிடையாது. பாடகி ஆக வேண்டும் என்பதுதான் ஒரே ஆசை, லட்சியம் எல்லாம். அப்புறம், இவர் பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் என்பது கூடுதல் தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x