Last Updated : 26 Mar, 2014 01:23 PM

 

Published : 26 Mar 2014 01:23 PM
Last Updated : 26 Mar 2014 01:23 PM

பேய் மரத்தில் ஊஞ்சலாடிய சுவாமி விவேகானந்தர்!

கொல்கொத்தா சிம்லா பகுதியில் வாழ்ந்துவந்த விசுவநாத தத்தருக்கும் புவனேசுவரிக்கும் அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தார்கள். ஆண் குழந்தை ஏக்கத்தில், காசி வீரரேசுவர சிவபெருமானைத் தியானித்து அவர்கள் செய்த வேண்டுதல் பலித்தது.

குழந்தைக்கு வீரரேசுவரர் என்று பெயரிட்டு, பாசத்துடன் கொஞ்சி வளர்த்தார்கள். பின்னாளில் விவேகானந்தர் என்று அறியப்பட்ட அந்த குழந்தையின் பள்ளிப் பெயர் நரேந்திரநாத். பிலே என்ற செல்லப் பெயரும் உண்டு.

சிறுவன் பிலேயின் தொல்லையைத் தாக்குப்பிடிக்க முடியாத பெற்றோர், ஒரு தாதியை நியமித்தார்கள். அதிகமாகச் சேட்டை செய்யும் நேரங்களில் மாடியறையில் அடைத்து, பூட்டிவிடுவார்களாம். கோபமாகிவிடும் பிலே, வெளியே போகும் பிச்சைக்காரர்களுக்கு, உள்ளே இருக்கும் பொருட்களை, ஜன்னல் வழியாக எடுத்துப்போடுவது வழக்கம். குடம்குடமாய் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டுவார்கள் என்ற குஷியில் அடிக்கடி சாக்கடையில் புரண்டு வருவது பிலேயின் விருப்பமான விளையாட்டு.

ஓர் இரவில் திடீரென பிலேயைக் காணவில்லை. பதறிப்போன அம்மா புவனேசுவரி, விளக்கை எடுத்துக்கொண்டு, வேலைக்காரர்கள் உதவியுடன் சுற்றுப்புறம் முழுக்கத் தேடினார். பதற்றம் அதிகமானதே தவிர, பையன் கிடைக்கவில்லை. அழுதுகொண்டே ஒரு வாழைத்தோப்பைக் கடந்து போகும்போது, பிலேயைப் பார்த்து ஓடிப் போய் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

“அனுமன் ஒரு சிரஞ்சீவின்னா, இப்போ எங்கே இருக்கார்னு ராமாயணக் கதை சொல்றவர்ட்ட கேட்டேன்மா!. வாழைத்தோப்புல இருப்பார்னு சொன்னார். அதுதான் வந்தேன்’’ என்பது பிலேயின் விளக்கம். இருட்டுப் பயம் அறியாத முரட்டு ஆன்மிகக் குழந்தையை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம் அம்மா புவனேசுவரி.

வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு செண்பக மரம் இருந்தது. பிலேயும் நண்பர்களும் அடிக்கடி அந்த மரத்தின் கிளையில் ஊஞ்சலாடுவார்கள். இரண்டு கால்களையும் கிளையில் மடித்து, தலைகீழாகத் தொங்கியபடி கைகளைக் காற்றில் வீசி, பிலே ஆடுவதை நண்பர்கள் வியந்து பார்ப்பார்கள்.

சிறுவர்களின் கூச்சல் சகிக்காத பக்கத்து வீட்டுப் பெரியவர், “தம்பிகளா! இந்த மரத்துல பேய் இருக்கு’’ என்றதும் மற்றவர்கள் ஓடிவிட்டார்கள். “அய்யா! இத்தனை நாளா ஆடறோம். பேய் இருந்தா நாங்க பண்ற கூத்துக்கு இதுக்குள்ள அடிச்சே கொன்னுருக்கும். குறைந்தபட்சம் மிரட்டியிருக்கும். இது ஒண்ணும் நடக்கல. இப்ப சொல்லுங்க, பேய் இருக்கா?’’ என்ற ஞானச் சிறுவனின் கேள்விக்கு பெரியவரிடம் பதில் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x