Published : 30 Sep 2016 11:22 AM
Last Updated : 30 Sep 2016 11:22 AM
ஆவின் பார்லர் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ஆவின் ஜங்ஷன்..? இது அம்மாவின் ஆணைக்கிணங்க உருவான, ‘ஹைடெக் ஜங்ஷன்!'
கஃபே ஷாப், பர்கர் ஷாப், பீட்சா ஹட் என அலுத்து சலித்துப் போன இளைஞர்கள், குடும்பங்கள், காதலர்கள் ஆகியோருக்கு, இந்த ‘ஆவின் ஜங்ஷன்'தான் இப்போதைய ஹாட் ஸ்பாட் ‘ஹேங் அவுட்!'
தமிழக அரசு நிறுவனமான ‘ஆவின்' மூலம் இயக்கப்படுகிறது இந்த ‘ஆவின் ஜங்ஷன்'. அரசு நிறுவனம்தானே என்று அசால்ட்டாக நினைத்து உள்ளே சென்று பார்த்தால் நம்மை வாய் பிளக்க வைக்கும் சூழல். நல்ல வெளிச்சம், எல்.சி.டி. தொலைக்காட்சி, குளிரூட்டப் பட்ட அறை, கண்களை உறுத்தாத இன்டீரியர் டெக்கரேஷன், இலவச வைஃபை, விதவிதமான ஸ்நாக்ஸ், புன்னகையுடன் வரவேற்கும் பணியாளர்கள், விசாலமான பார்க்கிங் வசதி, குழந்தைகள் விளையாட பூங்கா என அத்தனையும்... ஆசம், ஆசம்!
கடந்த சட்டமன்றக் கூட்டத்தின்போது சென்னையில் 17 இடங்களில் 8 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இத்தகைய 'ஹைடெக் பார்லர்கள்' நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
அந்த உத்தரவு மின்னல் வேகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதன்முதலில் வளசரவாக்கத்தில் திறக்கப்பட்டது இந்த ‘ஹைடெக் பார்லர்'. இப்போது அண்ணா நகர், அசோக் நகர், கிண்டி, பெசன்ட் நகர், வண்ணாந்துறை, திருவான்மியூர், தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. ஆகிய இடங்களிலும் இந்த ஹைடெக் பார்லர்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 9 இடங்களில் இத்தகைய பார்லர்கள் திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
வழக்கமான ஆவின் தயாரிப்புகளோடு, ஐஸ்க்ரீம், வெஜ் பீட்சா, வெஜ் பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற ஐட்டங்களும் கிடைப்பது இந்த பார்லரின் ‘ஸ்பெஷல்'. அவை அத்தனையும் குறைந்த விலையில் (பார்க்க: பெட்டி) தரமான சுவையுடன் கிடைக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு.
இத்தகைய பார்லர்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு 'ஆவின்' மூலம் ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 200 லிட்டர் ஐஸ்க்ரீம் மட்டுமே தயாரிக்கப்பட்டுவந்தது. இந்த பார்லர்கள் வந்த பிறகு, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் லிட்டர் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் மையம் ஒன்று அம்பத்தூரில் நிறுவப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லிட்டர் அளவிலான ஐஸ்க்ரீம்கள் விற்பனையாகின்றன.
இவ்வளவு செலவு செய்ததற்குப் பலன் உண்டா...? கைமேல் பலன். வார நாட்களில் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், வார இறுதி நாட்களில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலும் லாபம் ஈட்டுகிறது இந்த ஜங்ஷன்.
இந்த மாடல், விரைவில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ரிப்பீட் ஆக உள்ளது. "தற்சமயம் மதுரை, சேலம், ஈரோடு, தர்மபுரி, வேலூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பார்லர் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் இன்னும் சில மாவட்டங்களில் இதுபோன்ற பார்லர்கள் திறக்கப்படும்" என்கிறார் ஆவின் நிறுவனத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி.
எதற்கெடுத்தாலும் ‘பிரைவேட், பிரைவேட்' என்று கூவும் நாம், தனியார் நிறுவனங்களுக்கு ஈடாகப் போட்டி போடும் பொதுத்துறை நிறுவனங்களின் இத்தகைய முயற்சிகளையும் கைதட்டி வரவேற்கலாமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT