Published : 12 Feb 2016 10:25 AM
Last Updated : 12 Feb 2016 10:25 AM

"நான் ஃபைவ் பாய்ன்ட் சம் ஒன்!" - அனிருத் பேட்டி

24 வயதில் இளைஞர்களைத் தனது வசீகர இசையால் கட்டிப் போட்டவர் அனிருத். பல சோகங்கள் அவரைச் சுற்றி இருந்தாலும் அவருடைய வெளிப்படையான பேச்சு எப்போதுமே சுவாரஸ்யம்தான். ‘பீப்' பாடல் சர்ச்சைக்குப் பிறகு ‘தி இந்து' மூலமாக முதன்முறையாக மீடியாவிடம் தன் மவுனம் கலைக்கிறார். ‘காதலர் தின ஸ்பெஷல் ப்ரோ' என்ற வுடன் ‘காதலா..?' என்ற பயத்துடனே ‘ஹார்ட் ஓப்பன்' பண்ணுகிறார்...

காதலர் தின ஸ்பெஷலா ‘அவளுக் கென்ன' பாடலோடு வர்றீங்க. என்ன விசேஷம் சொல்லுங்க?

கடந்த 3 வருஷமா பிப்ரவரி 14-ம் தேதி ஏதாவது ஒரு பாட்டை வெளியிட்டுக்கிட்டே இருக்கேன். அந்த வகையில் இந்த வருஷம் ‘அவளுக்கென்ன' பாட்டு. போன வருஷம் வந்த‌ ‘எனக்கென்ன' பாட்டோட ‘ஸீக்வெல்' தான் ‘அவளுக்கென்ன' பாட்டுன்னு சொல்லலாம்.

சினிமாவுக்கு இசை அப்படிங் கிறதைத் தாண்டி, இப்படி தனியா பாடல்கள் பண்ணுற‌து ரொம்பப் பிடிச்சிருக்கு. படங்களுக்கு இசையமைக்கும்போது ஒரு எல்லை இருக்கும். ஆனால் இப்படி ‘சிங்கிள்ஸ்' பண்ணும்போது நான் ‘இண்டிபெண்டன்ட்'டா இருக்கேன். இந்தப் பாட்டை நானும் நிதின்னு ஒரு புது பொண்ணும் சேர்ந்து பாடியிருக்கோம். இதை விக்னேஷ் சிவன் எழுதி, இயக்கியும் இருக்கிறார். வருஷத்துக்கு இப்படி மூன்று ‘சிங்கிள்ஸ்' பண்ணலாம்னு ஒரு ஐடியா.

உங்க காதலர் தினம் எப்படி இருக்கும்?

காதலர் தினத்துல‌ எனக்கு நம்பிக்கையே கிடையாது. மூணு வருஷமா இந்த தினத்துல‌ ஒவ்வொரு பாட்டு வெளியிடுறதால‌ எனக்கு இந்த நாள் மனசுக்குப் பிடித்த நாள். அவ்வளவுதான். என்னோட‌ ரசிகர்கள் ஸ்கூல், காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்தான். நான் இதுவரைக்கும் காதலர் தினத்தைக் கொண்டாடியதே இல்லை. எனது காதல் நினைவுகள் காதலர் தினத்தன்னிக்கு மட்டுமல்ல. அப்பப்போ வந்து வந்து போகும்.

இந்த வருஷம் காதல் தினத்தன்னிக்கு மலேசியாவுல‌ இருக்கப் போறேன். அங்க‌ நடக்கப் போற என்னோட‌ இசை நிகழ்ச்சியே காதலர் தினத்தன்னிக்குதான். அந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் 15,000 ரசிகர்களோடு என் காதலர் தினத்தை கொண்டாடப் போறேன்.

உங்க வாழ்க்கையில‌ காதல்..?

கடந்த நாலு வருஷமா எனக்குக் காதலே இல்லைங்கிறதுதான் உண்மை. அதுக்கு முன்னால‌ எனக்கு இரண்டு காதல் தோல்விகள். ஒரு காதல் பத்தி எல்லோருக்கும் தெரியும். இன்னொரு காதல் பத்தி எனக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய வேலைக்கும், ‘லைஃப் ஸ்டைல்'க்கும் இடையில‌ காதலிக்குன்னு நேரம் ஒதுக்குற‌து ரொம்ப கஷ்ட‌ம். தினமும் மெசேஜ் அனுப்பனும். அவங்க அனுப்பினா அதுக்குப் பதில் அனுப்பணும். வெளியில‌ கூட்டிக்கிட்டுப் போகணும். இப்படி நிறைய ‘கமிட்மென்ட்ஸ்' இருந்ததால‌, எனக்குக் காதல் கைகூடலை.

காதல் தோல்வியில் இருந்து என்ன கத்துக்கிட்டீங்க‌?

காதல் தோல்வியில் இருந்து நல்ல பாடல்கள் பண்ண கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல ‘என்னோட காதல் தோத்துப் போனதாலதான் நான் கம்போஸ் பண்ற ‘சாங்ஸ்' எல்லாம் சக்சஸ் ஆகுதோ'ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இப்படி நினைக்கிறது பிரச்சினைன்னு எனக்குத் தெரியுது. ‘என்னிக்காச்சும் ஒரு நாள் இது மாறும்'னு நினைக்கிறேன். எனக்கு ‘இசை கடவுள் கொடுத்த கொடை'ன்னு சொல்றதுக்கான‌ வயசு கிடையாது.

ஓ.கே. ரிலாக்ஸ் ப்ரோ... ஒரு கற்பனைதான். உங்க முன்னாடி ஒரு பொண்ணு வந்து ‘நீங்கதான் என் வாழ்க்கை'னு சொல்லி கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டா, உங்க ரியாக்ஷன் என்னவாயிருக்கும்?

கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்தி இப்போதைக்கு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. அப்படி யாராவது சொன்னா “ரொம்பத் தப்பா யோசிக்கிறம்மா நீ"ன்னு சொல்லிடுவேன். உண்மையாவே ‘காதலே வேண்டாம்'ங்கிற‌ எண்ணம் வந்துருச்சு. ‘கண்டிப்பா இது மாறும். அடுத்த வருஷம் நீங்க என்னை ‘மீட்' பண்றப்ப ‘குட் நியூஸ்' சொல்றேன்'னு வேறு மாதிரி சொல்லலாம். கண்டிப்பா மூணு நாலு வருஷத்துக்கு திருமணம்’ங்கிற பேச்சே இருக்காது.

உங்க காதல் கைகூடாததற்கு என்ன காரணம்?

எனக்குத் தெரிஞ்சு என்னோட அஞ்சு பிரச்சினைகளைச் சொல்லிடுறேன். அந்தப் பிரச்சினைகள்தான் என்னோட காதல் கைகூடாதத‌ற்குக் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். இதைக் கேட்டதுக்கப்புறம் நீங்க என்னை ‘ஃபைவ் பாய்ன்ட் சம் ஒன்'னு நினைக்கலாம்.

* மத்தியானத்துல இருந்துதான் என்னோட‌ நாளே ஆரம்பிக்கும். அதனால மத்த விஷயங்களுக்கு என்னால‌ நேரம் ஒதுக்க முடியாது.

* இசையமைப்பாளர் அப்படிங்கிற எண்ணத்திலேயே ஒடிக்கிட்டு இருப்பேன்.

* தினமும் ஒரு மணி நேரம் போன்ல‌ பேசணும், வெளியே கூட்டிக்கிட்டுப் போகணும்னு பிளான் பண்ணா, நான் எங்கே கூட்டிட்டுப் போக முடியும்? அப்படியே போனா அடுத்த நாள் பேப்பர்ல போட்டோவோட‌ வந்துடும். பிரைவசி மிஸ் ஆகுது இல்லையா?

* என்னை யாராவது லவ் பண்ணாங்கன்னா அவங்களோட நான் ரொம்பவும் ‘அட்டாச்' ஆகிடுவேன். அதுவே பெரிய பிரச்சினையாகுது.

* நான் காதலிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருப்பேன். அந்த சந்தோஷத்துல தலை கால் புரியாம நிறைய தப்பு பண்ணி, ரொம்ப அடி வாங்கிட்டேன். அதனால இப்போ அந்தத் தப்பெல்லாம் பண்ணக் கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன்.

‘பீப்' பாடல்...?

‘பீப்' பாடலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு எத்தனையோ தடவை சொல்லியாச்சு. அந்த கேஸ் கோர்ட்ல‌ இருக்குறதால‌, அதைப் பத்தி இப்போ எதுவும் பேச வேண்டாம்னு நினைக்கிறேன். கனடாவுக்குப் போனப்போ எனக்கு வாட்ஸ்‍அப்புல‌ நிறைய மெஸேஜ். அப்போதான் ‘நாம கான்ட்ரோவர்ஸியில‌ சிக்கியிருக்கோம்'னு எனக்கே தெரிஞ்சுது.

அந்த டைம்ல உங்க ஃபேமிலியில எப்படி ‘ஃபீல்' பண்ணாங்க..?

ஒரு ‘கான்சர்ட்' முடிச்சிட்டு சந்தோஷமா சென்னை வந்தேன். ஃப்ளைட்டுல‌ வந்த அலுப்பில‌ தூங்கிட்டேன். ஒரு மணி நேரத்தில‌ எழுப்பி 'உன் மேல கேஸ் ஃபைல் பண்ணியிருக்காங்க'ன்னு சொன்னாங்க. ‘இந்த வருஷ‌முமா..?'ன்னு நினைச்சேன். அவ்வளவுதான்.

‘கொலவெறி' பாட்டு வெளியான நேரத்துல இருந்தே பிரச்சினைதான். அந்தப் பாட்டுக்கு வராத எதிர்ப்பா சொல்லுங்க..? அதுக்கு வழக்குப் போட்டாங்க. போன வருஷம் நான் ஒரு பாட்டு தனியா போட்டேன். அதுக்கும் வழக்குப் போட்டாங்க. 'கத்தி' படம் வெளியானப்போ கல் எறிஞ்சாங்க‌. முதல் தடவை கான்ட்ரோவர்ஸியில சிக்கினப்போ ரொம்ப வருத்தப்பட்டது உண்மைதான். இப்போ அதைப் பத்தி எல்லாம் நான் கவலைப்படுற‌தில்லை. எனக்கு அதுல‌ சம்பந்தமில்லைங்கிறதால என்னோட ஃபேமிலி என்ன சொல்லப் போறாங்க. ஒன்னும் சொல்லலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x