Published : 29 Jul 2016 12:27 PM
Last Updated : 29 Jul 2016 12:27 PM

செய்தியைக் கொல்!

தலைப்பே பயமுறுத்துகிறதா? இன்று உள்ள பத்திரிகை உலக நிலை இதுதான்!

பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்' நாவலுக்கு நல்ல தீர்வு கிடைத்ததென்று கருத்துரிமை ஆர்வலர்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்ட நேரத்தில், ‘காஷ்மீரில் பத்திரிகைக்குத் தடை', ‘கேரளத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்', ‘துருக்கியில் 42 பத்திரிகையாளர்கள் மீது பிடி ஆணை' என அடுத்தடுத்துத் தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன.

‘விடுங்க சார். இதெல்லாம் அரசுக்கு எதிராகப் பத்திரிகைகள் எழுதும்போது மட்டும்தான்' என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. ‘கார்ப்பரேட்ஸ்' எனப்படும் பெருநிறுவனங்களுக்கு எதிராக நீங்கள் உண்மையை எழுதினால் உங்கள் பேனாவைச் சட்டத்தால் முறித்துப் போட முடியும். அது எப்படிச் சாத்தியம் என்று சொல்கிறது, ‘ஸூ த மெஸெஞ்சர்' எனும் புத்தகம்.

அம்பானிகளின் இயற்கை எரிவாயுத் திட்டம் குறித்து ‘காஸ் வார்ஸ்' என்ற புத்தகத்தை எழுதிய சுபிர் கோஷ் இந்தப் புத்தகத்தின் முதன்மை ஆசிரியர். அவருடன் இணைந்து ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி' இதழின் ஆசிரியர் பரன்ஜோய் குஹா தக்குர்தாவும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ‘ஆதர்ஸ் அப் ஃப்ரன்ட்' பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியானது.

திருபாய் அம்பானி குறித்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஹாமிஷ் மெக்டொனால்ட் எழுதிய ‘தி பாலியஸ்டர் பிரின்ஸ்', சஹாரா நிறுவனம் குறித்துப் பத்திரிகையாளர் தமல் பந்த்யோபதயாய் எழுதிய ‘சஹாரா: தி அன்டோல்ட் ஸ்டோரி' போன்ற வணிக நிறுவனங்கள் மற்றும் அவற்றின் முதலாளிகள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களுக்கு நேர்ந்த கதி குறித்து இந்தப் புத்தகத்தில் விரிவாக அலசப்படுகிறது.

தவிர, வணிக நிறுவனங்களுக்கு எதிராக உண்மையை எழுதும் சுதந்திரப் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், பெருநிறுவனங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையில் நடைபெறும் மறைமுக பேரங்கள் போன்றவையும் இதில் பேசப்படுகின்றன.

இந்த விஷயங்களின் மையமாக இந்நூலாசிரியர்கள் ‘ஸ்லாப்' (SLAPP - Strategic Lawsuits Against Public Participation) எனும் சட்டச் சிக்கலைக் கவனப்படுத்துகிறார்கள். அதாவது, தன்னை அல்லது தன் நிறுவனத்தைக் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கும் எனப் பத்திரிகைகளில் வெளியாகும் ஏதேனும் ஒரு கட்டுரை அல்லது புத்தகம் ஆகியவற்றை ஒரு நிறுவனத்தின் அதிபர் ‘கட்டம் கட்டினால்', அவரால் சட்ட பூர்வமாக உடனே அந்தக் கட்டுரையை அல்லது புத்தகத்தை அவை வெளிவரும் முன்பே தடை செய்ய முடியும். மீறி வந்தால், பல நூறு கோடி ரூபாய்க்கு அவதூறு வழக்குப் போட முடியும். அதுவும், அந்தப் பத்திரிகை அல்லது புத்தகம் வெளியாகும் இடம்தான் என்றில்லாமல், இந்தியாவின் எந்த மூலையில் உள்ள நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க முடியும்.

சரி, ஏன் அவ்வளவு தொகையை இழப்பீடாகக் கேட்கிறார்கள்? அந்தப் பணத்தை வைத்துத்தான் தொழிலதிபர்கள் தங்கள் இழப்பைச் சரி செய்துகொள்ளப் போகிறார்களா என்ன? இல்லை. மாறாக, ‘இனி இப்படி ஒரு கட்டுரை அல்லது புத்தகத்தை எழுதினால் நமக்கும் இதே கதிதான்' என்ற அச்ச உணர்வை இதர பத்திரிகையாளர்களுக்கு ஏற்படுத்துவதுதான் இப்படியான வழக்குகளின் முக்கிய நோக்கம் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.

பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள், பத்திரிகை உலகத்துக்குள் வர நினைக்கும் மாணவர்கள், கருத்துரிமைப் போராளிகள் என அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x