Published : 25 Jul 2014 01:17 PM
Last Updated : 25 Jul 2014 01:17 PM

கல்லூரிகளில் செல்போன்களுக்குத் தடை?

எதிராக அதிகரிக்கும் பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் செல்போன்கள்தான். அதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என் கர்நாடக சட்டமன்றம் சமீபத்தில் அம்மாநில அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.

செல்போன் உண்மையிலேயே சமூகத்தைச் சீர்கெடுக்கும் ஒரு கருவியா? செல்போன்களைத் தடை செய்துவிட்டால் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறைந்துவிடுமா என மாணவர்கள் சிலரிடம் கேட்டோம்:

ஆர். ஜனனி, மூன்றாம் ஆண்டு, எம்.டி.எஸ், ஆர்.வி. பல் மருத்துவக் கல்லூரி, பெங்களூர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு செல்போன் களைக் குற்றம் சாட்டுவதில் எந்த அடிப்படையும் இல்லை. ஒரு டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆகும்போது சில நன்மைகளும், சில ஆபத்துகளும் இருக்கவே செய்யும்.

எது ஆபத்து, எது நல்லது என்று சரியான முறையில் மதிப்பிடுவது ஒவ்வொரு தனிநபரையும் பொறுத்த விஷயம். விவேகமாகப் பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் வராது.

கல்லூரியில் செல்போன் பயன்படுத்துவதில் பல நன்மை கள் இருக்கின்றன. ஒரு பெண் தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்கு செல்போன் நிச்சயம் உதவிசெய்யும். செல்போன் களைத் தடை செய்தால் மாணவர்களுக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப நன்மைகள் பாதிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைய வேண்டுமானால், பெண்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்று ஆண்களுக்குச் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.

சட்டங்கள் கடுமை யாக வேண்டும். அதுதான் மாற்றத்தை உருவாக்குமே தவிர, செல்போன்களைக் கல்லூரியில் தடை செய்வதால் எந்த நல்ல மாற்றமும் நடக்காது.

வி. சுவர்ண கௌரி, நான்காம் ஆண்டு, பி.பார்ம், ஏசிடி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

செல்போன்களின் தேவை ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம். நாங்கள் வெளியே செல்லும் போது எங்களையும் எங்கள் பெற்றோரையும் இணைப்பது செல்போன்கள்தான். நாங்கள் எங்காவது வழிமாறிச் சென்றுவிட்டால்கூட செல்போனில் இருக்கும் நேவி கேஷன் சரியான இடத்திற்குப் போக உதவிசெய்கிறது.

எதிர்பாராத காரணத்தால் லேட் ஆகிவிட்டாலும் செல்போன் இருந்தால்தானே பேரண்ட்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியும்? வாட்ஸ் ஆப், வைபர் போன்ற ஆப்ஸ்களால் நண்பர்களுடன் எப்போதும் எங்களால் தொடர்பில் இருக்க முடிகிறது. செல்போன்களைத் தடைசெய்தால் மாணவர்கள் மத்தியில் ஒருவித பாதுகாப் பின்மையை உருவாக்கும். குறிப்பாக, பெண்களை அது ரொம்பவே பாதிக்கும்.

வி.ஷியாம் கௌதம், இரண்டாம் ஆண்டு, பி.ஏ. இதழியல், மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி

என்னைக் கேட்டால் நவீன உலகின் கண்டுபிடிப்புகளில் சிறந்த கண்டுபிடிப்பு செல்போன்தான் என்று சொல்வேன். இன்று செல்போனைத் தொடர்புக்குப் பயன்படுத்தும் ஒரு கருவியாக என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், செல்போன் நமக்குத் தரும் அறிவு அதிகம். அது பெரிய நாலெட்ஜ் சோர்ஸ்.

அதே சமயம், செல்போனை மோசமாகப் பயன்படுத்தினால் செல்போனைவிட ஆபத்தான கருவி வேறில்லை. என்னைப் பொறுத்தவரை அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்தலாம் என்று சொல்லித்தருவதுதான், அதைத் தடை செய்வதைவிடச் சிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x