Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM
கோலிவுட்டின் அறிமுக நடிகைகளில் இப்போது அதிக பிஸியாக இருப்ப வர் என்று மஹிமா நம்பியாரைச் சொல்லலாம். ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ‘என்னமோ நடக்குது’, ‘மொசக்குட்டி’, ‘புரவி 150 சிசி’, ‘அன்னப்பறவை’ என்று அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து வருகிறார். இத்தனை படங்களும் போதாதென்று வேறு சில புதுப் படங்களுக்கும் கதை கேட்டு வருகிறார் இந்த கேரள இளவரசி. பிஸியான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் அவரைச் சந்தித்தோம்.
நிறைய படங்கள் நடித்துக்கொண்டிருப்ப தெல்லாம் சரி. உங்கள் அறிமுகப் படமான ‘சாட்டை’க்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆளையே காணோமே?
‘சாட்டை’ படம் வெளியானபோது நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் பள்ளியில் முதல் மாணவி நான்தான். பொதுத் தேர்வில் 95 சதவீதம் மார்க் எடுத்திருந்தேன். பயோ மெடிக்கல் படிக்கவேண்டும் என்ற ஆசை ஒருபக்கமும், சினிமாவில் நடிக்கும் ஆசை மறுபக்கமும் இருந்தது. நடிப்பா, படிப்பா என்ற குழப்பத்தில் இருந்து தெளிவு பிறக்கவே பல மாதங்கள் ஆகிவிட்டது. கடைசியில் நடிப்புதான் என்று முடிவெடுத்து வந்துவிட்டேன். கல்லூரிக்கு போகாவிட்டாலும் தொலைதூர கல்வி வழியாக ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறேன்.
கல்லூரி வாழ்க்கையை இழந்து விட் டோமே என்ற கவலை இல்லையா?
சில நாட்கள் முன்பு வரை இருந்தது. ஆனால், எனக்கு அதைவிட நடிக்கும் ஆசை அதிகம் என்பதால் இப்போது காணாமல் போய்விட்டது.
நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறீர்களே. சென்னையில் செட்டில் ஆகி விட்டீர்களா?
அம்மா ஊரில் ஆசிரியையாக இருக்கிறார். அவர் இல்லாமல் என்னால் தனியாக இருக்க முடியாது. அதனாலயே கேரளாவை விட்டு எங்கும் போய் செட்டில் ஆக விருப்பம் இல்லாமல் இருக்கேன். இப்போதைக்கு ஷூட்டிங் நேரத்தில் அம்மா அல்லது அப்பாவுடன் வந்து நடித்துவிட்டு போகிறேன்.
கேரள நாயகிகள் பலரும் இங்கு வந்து தமிழ் சினிமாவை அபகரிச்சிட்டீங்களே?
புது நாயகிகளின் வருகை ரொம்பவே சந்தோஷம் அளிக்குது. திறமை இருக்குற தாலத்தான் அவங்களுக்கு தொடர்ந்து இங்கே வாய்ப்பும் கிடைக்குது. அந்த வரிசையில் எனக்கும் தமிழில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எந்த மாதிரியான படங்கள் உங்களுக்கு பிடிக்கும்?
காதல் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அடுத்த இடம் நகைச்சுவைப் படங்களுக்கு. இப்போது வரும் காமெடிப் படங்கள் ரொம்பவே கியூட்டா இருக்கு. சந்தானம், வடிவேல் காமெடியை திரும்பத்திரும்ப பார்ப்பேன். அதே போல விஜய் சேதுபதி ஹூயூமர் காமெடியும் ரசிக்க வைக்குது.
எந்த மாதிரியான பாத்திரங்களில் நடிக்க ஆசை?
இன்னைக்கு பரபரப்பா இருக்கும் இயக்குநர்களின் படங்களில் வரிசையா நடிக்க எனக்கு ஆசை. கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொள்வேன். ‘அருந்ததி’ படத்தில் அனுஷ்கா நடித்த கேரக்டர் மாதிரியும், ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் தீபிகா படுகோன் நடித்த கேரக்டர் மாதிரியும் ஒரு படம் பண்ணணும். இப்போதைக்கு என் ஆசை இதுதான். எல்லாத்தையும் விட முக்கியமா சூர்யாவுக்கு ஒரு படத்திலயாவது ஜோடியா நடிக்கணும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment