Last Updated : 28 Dec, 2013 12:00 AM

 

Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

"இந்தப் புத்தாண்டு ஆராதனாவுடன்தான்." - உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்

2013-ம் ஆண்டில் டாப் கியரில் பயணித்த ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அந்த வேகத்தை சற்றும் குறைக்காமல் அடுத்த ஆண்டிலும் பயணிக்க தயாராகி வருகிறார். 2014-ல் ரிலீஸாகவுள்ள அவரது முதல் படம் ‘மான் கராத்தே’. இந்தப் படத்துக்காக ஹன்சிகா மோத்வானியுடன் காதல் கராத்தேவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மாமல்லபுரம் சாலையில் சந்தித்தோம்.

இந்தப் படத்தில் என்ன கருத்து சொல்ல வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

முதல்லயே இப்படி தொடங்கினா எப்படி நண்பா. நீங்களே சொல்லுங்க, நாம வந்து கருத்து சொன்னா சரியா இருக்குமா? புதுசா ஒரு காதல் சொல்ல வர்றோம். துறுதுறுனு சுத்திக்கிட்டிருக்கிற வெகுளிப் பாப்பா ஹன்சிகாவை, எவ்ளோ தூரம் துரத்தி துரத்தி காதல் செய்றான் பீட்டர் (சிவா) அப்படிங்கிறதுதான் படத்தோட ஒன்லைன். இந்தப் படத்துல மீசை இல்லாமல் நடிச்சிருக்கேன். அதுக்காக உடைகள், பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் மாத்த கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்துல முழுக்க முழுக்க காமெடியெல்லாம் இருக்காது. கொஞ்சம் ஆக்‌ஷன். அள்ள அள்ள காதல் இருக்கும். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோட கதை. அவர் உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். இளைஞர்கள் ஒவ்வொருத்தருக்கும் இந்தப் படம் காதல் உணர்வைக் கொடுக்கும். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஜாலி விருந்து.

ஷூட்டிங்ல ஹன்சிகா என்ன சொல்றாங்க?

கதை சொல்லும்போதே ஹன்சிகா மாதிரி ஒரு பொண்ணுன்னு எடுத்துக்கிட்டுதான் சொன்னாங்க. கதை முழுக்க ஹன்சிகா மாதிரி, ஹன்சிகா மாதிரின்னு பேசிவிட்டு அவங்க இல்லாமல் இருந்தால் எப்படின்னு யோசிச்சோம். தயாரிப்பு தரப்பில் அவங்ககிட்ட கதையைச் சொன்னாங்க. கிளைமேக்ஸ் வரைக்கும் அவங்க கேரக்டரோட முக்கியத்துவத்தை பார்த்துட்டு உடனே ஒப்புக்கொண்டாங்க. ஷூட்டிங்குல ஹன்சிகா, பயங்கர துறுதுறு கேரக்டர். செம ஜாலிப் பேர்வழி. யாரையாவது வம்புக்கு இழுத்துக்கிட்டே இருப்பாங்க. அவங்க அமைதியா இருந்து பார்த்ததே இல்லை. அதுவும் இயக்குநர் திருக்குமரனை வம்புக்கு இழுக்கலைன்னா அவங்களுக்கு பொழுதே போகாது. அவர் என்கிட்ட வந்து ஹன்சிகா பத்தி புகார் கொடுப்பார். நம்ம சிக்கிடுவோமா நண்பா, சொல்லுங்க.

உங்க குழந்தை ஆராதனா எப்படி இருக்காங்க?

குட்டிப்பாப்பா சமத்தா அம்மாக்கூட விளையாடிக்கிட்டிருக்காங்க. பிறந்து 2 மாசம் ஆகுது. ஆனா நான் அவங்களோட இருந்தது ரொம்ப குறைச்சலான நாட்கள்தான். இப்பக்கூட அவளைப் பார்த்து 20 நாட்கள் ஆச்சு. அவங்க அம்மாதான் அவங்களுக்கு எல்லாம். அவளோட விளையாட்டு, தூக்கம், புன்னகைன்னு எல்லா விஷயங்களையும் நான் செல்போன் மூலமாதான் பார்த்துக்கிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இந்த புத்தாண்டை என் ஆராதனாவுடன் சேர்ந்து கொண்டாட இருக்கிறேன். அதேபோல அவங்க எங்களுக்கு பரிசா கிடைச்சபெறகு முதலில் வெளிவரப்போற படம் ‘மான் கராத்தே’. படம் ரிலீஸப்போ அவங்க 6 மாதக் கைக்குழந்தையா இருப்பாங்க. முதன்முதலா அப்போ அவங்களை தியேட்டருக்கு கூட்டிட்டு போகணும்னு இருக்கேன். திரையில வர்ற என்னை பார்த்துட்டு அவங்க எப்படி பாவனை காட்டப்போறாங்கன்ற எதிர்பார்ப்பு எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.

உங்க தலையில் இருந்த தொகுப்பாளர் கிரீடத்தை தூக்கி மா.கா.பா ஆனந்த் தலையில் வச்சீங்க. இப்போ அவரும் உங்களை பின் தொடர்ந்து சினிமாவுக்கு வந்துட்டாரே?

இதுதானே வேணும். அங்கிருந்து சினிமாவுக்கு வர முடியாதுங்கிற நிலையை உடைச்சிருக்கீங்கன்னு என்கிட்ட நண்பர்கள் சொல்வாங்க. அது தொடர்ந்து நடந்தா சந்தோஷம். இனிமேல் தொலைக்காட்சியை யாரும் சாதாரணமா பார்க்க மாட்டாங்க. பெரிய லிப்ட் அதுதான்னு நம்புவாங்க. அங்கிருந்து வரும்போது நிறைய கத்துக்கணும். அதுவேற இதுவேறதான். சினிமாவுக்கு ஏற்ற மாதிரியான ஆட்கள் மட்டும்தான் வரமுடியுது. மா.கா.பா அப்படித்தான். நிறைய உழைப்பார். அதேபோல தொடர்ந்து எல்லாருமே வர்றது நல்ல விஷயம். இங்கே வந்துட்டோம் ஜெயிச்சிட்டோம் என்பதெல்லாம் எனக்கு இல்லை. சரியான ஆரம்பம் கிடைச்சிருக்கு. இந்த வெற்றியை எப்படி பாதுகாப்பானதா தொடர்ந்து கொண்டுப்போகப் போகிறேன் என்பதில்தான் எல்லாம் இருக்கு. ம்ம்ம்… பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x