Published : 05 Sep 2014 01:39 PM
Last Updated : 05 Sep 2014 01:39 PM
லஞ்ச் பாக்ஸ் படத்தில் சிறந்த நடிப்பிற்காகப் பாராட்டப்பட்ட நிம்ரத் கவுர், அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ‘ஏர்லிஃப்ட்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாற்று சினிமா முயற்சிகளில் புகழ்பெறும் ஹீரோயின்களை அத்தனை சீக்கிரம் வணிக சினிமா வட்டம் அரவணைத்துக்கொள்ளாது. ஆனால் லஞ்ச் பாக்ஸின் வெற்றி, மசாலா ரசிகர்கள் மத்தியில் நிம்ரத்துக்கு டார்லிங் அந்தஸ்தைக் கொடுத்துவிட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்த நிம்ரத் கவுர், மும்பையில் பத்திரிகை மாடலாக அறிமுகமானவர். பாக்தாத் வெட்டிங் போன்ற புகழ்பெற்ற நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 2006-ம் ஆண்டில் ராஜஸ்தானிலேயே எடுக்கப்பட்ட ‘ஒன் நைட் வித் த கிங்’ என்ற ஆங்கிலப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நிம்ரத்துக்கு லஞ்ச் பாக்ஸுக்கு முன் பெரும் புகழ் கொடுத்தது காட்பரி டைரி மில்க்-சில்க் சாக்லேட் விளம்பரப்படம்தான்.
தனிமையில் இருக்கும் குடும்பப் பெண் ஒருவரின் மன உணர்வுகளை ‘தி லஞ்ச் பாக்ஸ்’ படத்தில் இயற்கையாக நிம்ரத் கவுர் வெளிப்படுத்தியிருந்த விதம் இந்தியா தாண்டி திரைப்பட விழாக்களிலும் கொண்டாடப்பட்டுவருகிறது.
தற்போது அக்ஷய் குமாருடன் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஏர் லிஃப்ட் திரைப்படம், குவைத் நாட்டை ஈராக் படையினர் ஆக்கிரமித்தபோது அகப்பட்டுக்கொண்ட இந்தியர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட விறு விறு மாஸ் மசாலா கதை. ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்களை, 59 நாட்களில் மீட்ட அசாதாரண நடவடிக்கை அது. அக்ஷய்குமாரின் மனைவியாக நடிக்க வலுவான நடிகை தேவைப்பட்டது என்று சொல்லும் இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன், நிம்ரத் கவுர் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார். லஞ்ச் பாக்ஸுக்காக சுவையாக, விதம்விதமாகச் சமைத்த நிம்ரத் கையில் இனி ரிவல்வாரைக் கொடுத்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment