Last Updated : 26 Oct, 2024 07:26 PM

 

Published : 26 Oct 2024 07:26 PM
Last Updated : 26 Oct 2024 07:26 PM

ஐபோனில் திரைப்படம் எடுப்பது எளிது! | இயக்குநர் தருண் தேஜா பேட்டி

மூன்சென்: நவீன டிஜிட்டல் யுகத்தால் ஐபோனிலும் எடுக்கும் அளவில் திரைப்படத் தயாரிப்பு எளிதாகி விட்டதாகக் கூறுகிறார் ஜெர்மனிவாழ் தமிழரான தருண் தேஜா. சென்னையை சேர்ந்த இளைஞர் தருண் தேஜா ஜெர்மனிக்கு கடந்த அக்டோபர் 2012 இல் உயர்கல்விக்காக வந்தவர். இங்கு பட்டமேற்படிப்பிற்கு பின் அவரது முனைவர் பட்டத்திற்கான ஆய்வும் 2017 இல் முடித்து விட்டார். இதனிடையே தனக்கிருந்த சினிமா மோகத்தால் அவர் திரைப்படம் இயக்கத் துவங்கி விட்டார். ஜெர்மனியின் மூன்செனில் வசிக்கும் தருணை நேரில் சந்தித்து எடுத்த பேட்டியிலிருந்து:

கேள்வி: வசந்த் ரவி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்த ‘அஸ்வின்ஸ்’ முதல் படத்தைப் பற்றிக் கூறுங்களேன்?

பதில்: இது, பிரிட்டனிலுள்ள ஓசி தீவில் படமாகி ‘அஸ்வின்ஸ்’ எனும் பெயரில் திகில் படமாக வெளியானது. தியேட்டர்களில் ஜுன் 2023 இல் வெளியான பின் நெட்பிளிக்ஸில் பதிவேற்றமானது. லோபட்ஜெட் படமான இது அதன் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்றுத் தந்தது. ஐரோப்பா, அமெரிக்க, ஆப்ரிக்கா போன்ற வெளிநாடுகளில் தமிழ் திரைப்படங்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு பெரும் உதவியாக நான் உயர் கல்வி பெற்ற ஜெர்மனியின் அனுபவம் அடிப்படையாக அமைந்து விட்டது.

தருண் தேஜே

கேள்வி: பொறியியல் மாணவரான உங்களுக்கு திரைப்பட ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

பதில்: சினிமாவின் மீதான மோகம் எனக்கு சிறுவயது முதல் உண்டு. ஜெர்மனியில் உயர்கல்விக்கு இடையே கோவிட் பரவலில் சென்னையில் சிக்கி இருந்தேன். அப்போது கிடைத்த நேரத்தில் ஒரு ஷார்ட் பிலிம் எடுத்தேன். இதற்கு எனது ஒரு ஷாட் லைட்டும், சிறிய கோப்ரூ கேமிராவும் போதுமானதாக இருந்தது. ஐபோனிலும் எடுக்கும் அளவில் திரைப்படத் தயாரிப்பு எளிதாகி விட்டது அதன் காரணமானது. இதற்கு கதை மிகவும் முக்கியம். பிறகு முனைவர் பட்டத்திற்கானக் கல்வியின் போது சர்வதேசங்களின் நண்பர்களுடன் இணைந்து ஆவணப் படங்களும் தயாரித்தேன். இவற்றில் சில சர்வதேச பிலிம் பெஸ்டிவலில் தேர்வாகி அங்கும் திரையிடப்பட்டன. எனக்கு ஆந்திராவில் கிடைத்த எஸ்விசிசி புரடெக்‌ஷன்ஸ் எனும் தெலுங்கு படத் தயாரிப்பாளர் பாபிந்தர் சாரும் பிரவின் டேனியலும் உதவியதால் எனது முதல் படமாக வெளியானது.

கேள்வி: எந்தவகையானத் திரைப்படங்கள் எடுப்பது உங்கள் நோக்கம்?

பதில்: எனது படங்களில் அதிகமாகக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன். வெளிநாடுகளில் என் அனுபவம் காரணமாக அதன் அடிப்படையில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களுக்கு ஏதுவாக அந்த படங்கள் இருக்கும். முதல் படமும் வெளிநாட்டில் எடுக்கப்பட்டாலும் ரிக்வேதத்தில் குறிப்புள்ள அஸ்வினி தேவர்கள் பற்றி கூறியுள்ளேன். இதுபோல், ஒவ்வொரு கதையிலும் நம் கலாச்சாரத்தின் ஒரு வேர் இடம்பெறும்.

கேள்வி: வெளிநாட்டில் அதிகமாக நீங்கள் இருப்பதால் தென்னிந்திய திரையுலகத் தொடர்பை வளர்ப்பதில் சிரமம் இருக்குமே?

பதில்: எனக்கு திரையுலகின் பெரிய முக்கியவர்களுடன் இல்லை என்றாலும் சிறிய அளவிலானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளேன். விரைவில் எனது திரைப்படங்கள் மூலம் பெரிய முக்கிய நபர்களின் கவனத்தையும் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில், பள்ளி வயதில் ஹேராம், ரங் தே பஸந்தி போன்ற ஜாம்பவாங்களின் படங்களால் திரையுலகின் மீது என் மோகம் துவங்கியது. இதன் கதைக்கருக்களை என்னால் மறக்க முடியாது. ஹாலிவுட், பாலிவுட், தென்னிந்திய படங்களின் தாக்கம் என்னுள் அதிகம் இருப்பினும் நான்தமிழ் ரசிகர்களைக் கவரும் எனது கதைகளின் மூலம் தனி ஆவர்த்தனம் இட முயல்கிறேன்.

கேள்வி: நடிக்கும் ஆர்வம் உண்டா?

பதில்: கண்டிப்பாக. எனக்கு உகந்த பாத்திரங்கள் கிடைத்தால் மற்றவர்களின் படங்களையும் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.

கேள்வி: திரைப்படங்களில் அதிகமாக டூயட் பாடி ஆட மட்டுமே என வெளிநாடுகள் உள்ளன. இந்த பார்வையில் நீங்கள் கானும் மாற்றம் என்ன?

பதில்: வெளிநாடுகளின் முக்கிய அம்சங்களை நம் ரசிகர்களுக்கு ஏற்ற பார்வையில் நான் அளிக்க விரும்புகிறேன். நம் கலாச்சாரம் இங்கு இல்லை என்றாலும் நமது தமிழ் பாத்திரங்களை வெளிநாடுகளில் பயணிக்க வைத்து, தொடர்புபடுத்தினால் ரசிக்கும்படியாக இருக்கும் என்பது எனது கருத்து. நம் நாட்டை போல் அன்றி வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பது மிகவும் சிரமம். எனினும், எனக்கு இங்குள்ள நட்பு வட்டாரம், வெளிநாடுகளின் பயணம் மற்றும் உள்நாட்டு மொழி அறிந்திருப்பது ஆகியன இதற்கு பலன் தரும் என நம்புகிறேன். நான் இறங்கியுள்ள அடுத்த தயாரிப்பின் படப்பிடிப்பும் வெளிநாடுகளில் அதிகமாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x