Published : 05 Jul 2024 06:25 AM
Last Updated : 05 Jul 2024 06:25 AM

“கமலுடன் மோதும் காரணம் இதுதான்!” - ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நேர்காணல்

முயல்வதில், மலையுடன் மோதிப் பார்ப்பதில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஒரு தன்னம்பிக்கைக் கலைஞர். ஒரே ஷாட்டில் ஒரு நான் - லீனியர் திரைப்படம் என்கிற முயற்சியை ‘இரவின் நிழல்’ வழிச் சாதித்துக் காட்டியவர். வியாபார வெற்றியையெல்லாம் கடந்து, அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குப் பெருமிதம் கூட்டியவர்.

அதன் பிறகான நீண்ட மௌனம் அவரது பொருளாதாரப் போராட்டங்களைச் சுட்டினாலும் அதை உதறியெழுந்து, ‘த்ரில்லர் அட்வென்ச்ச’ராக உருவாகியிருக்கும் ‘டீன்ஸ்’ படத்துடன் வந்திருக்கிறார். அப்படம் திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகிவிட்ட இத்தருணத்தில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

‘இரவின் நிழல்’ என்கிற பகீரத முயற்சியில் நீங்கள் பெற்றதும் கற்றதும் என்ன? - கற்றதே பெற்றது; பெற்றதே கற்றது. என்னுடைய கலா ரசனை என்ன; அது எப்படிப்பட்டது என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்கான ஒரே களம் என்னுடைய படைப்புகள். அறுபதுகளின் ‘பென்-ஹர்’ மாதிரி அசல் பிரம்மாண்டமோ, ‘காட்ஃபாதர்’ போல் தமிழில் தழுவி எடுப்பதற்கான ஒரு காவியப் படமோ ஏன் ஹாலிவுட்டிலிருந்து மட்டுமே வருகின்றன? முயன்றால் நம்மாலும் முடியும் என்பது எப்போதும் எனக்கிருக்கும் திமிர். அந்தத் திமிருடன் எடுக்கப்பட்ட படம் தான் ‘இரவின் நிழல்’. இந்தக் கேள்வியை இன்று கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.

ஆனால், நேற்றிரவு மீண்டும் உட்கார்ந்து ‘இரவின் நிழ’லைப் பார்த்தேன். உறைந்து போனேன். நான் உள்பட யாராலும் மறுமுறை ‘ரீகிரியேட்’ செய்ய முடியாத ஓர் அசுர முயற்சி அது. நல்ல கலைஞன் என்பவன் ‘கிரியேட்டிவ்’ ஆக வளர்ந்துகொண்டே செல்லவேண்டும். காலத்தோடு மதிக்காமல், காலம் கடந்து மதிப்பதே நல்ல கலைஞர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை முறை என்பதுதான் இங்கே நான் கற்றது.

இதற்கு பாரதி தொடங்கி இன்று வரை பல படைப்பாளிகளை எடுத்துக்காட்டாகக் கூற முடியும். மூன்று வேளை உணவு கிடைக்காது என்று தெரிந்துதான் சினிமாவுக்கு வந்தேன். இப்போது உலகில் எந்த மூலைக்குப் போனாலும் என்னை உட்கார வைத்துச் சோறுபோட மக்கள் இருக்கிறார்கள். இதுதான் நான் பெற்றது.

‘டீன்ஸ்’ படத்துக்கான தொடக்கப் புள்ளி? - நானும் என்னுடைய எழுத்தாளர் நண்பர் தமிழரசனும் சென்னைப் பெருநகரத்துக்கு வெளியே ஒரு பெரிய தோட்டத்தில் நடந்து வந்துகொண்டிருந்தோம். அங்கே மரம், செடி, கொடி என்று எதுவும் இல்லை. நிழலே இல்லாத பட்டப் பகலில் பார்க்கவே அப்பகுதி அச்சத்தைக் கொடுத்தது. அப்போதுதான் அந்த எண்ணம் தோன்றியது. ‘ உயிருக்குயிரான 10 நண்பர்கள் ஒரு பெரிய வெட்டவெளியை நடுப்பகலில் கடந்து சென்று அடுத்து வரும் ஒரு கிராமத்தை அடைய நினைக்கிறார்கள்.

அவர்கள் நடக்க, நடக்கப் பின்னால் வரும் ஒவ்வொருவராகக் காணாமல் போய்க்கொண்டிருந்தால் எஞ்சியிருப்ப வர்களுக்கு எப்படியிருக்கும்?’ என்று நண்பரிடம் கேட்டேன். அவர் ‘அதிர்ச்சியாக இருக்கும். ஹாலிவுட்டில்கூட இப்படியொரு ‘டே டைம் ஹாரர்’ தீம் வந்ததில்லை’’ என்றார். இப்படிச் சாதாரணமாகத் தொடங்கிய புள்ளிதான் ‘டீன்ஸ்’. நானும் தமிழரசனும் சில நாள்களுக்கு முன் ‘கல்கி’ படம் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வந்ததும் தமிழரசன் சொன்னார். ‘கல்கி’ பிரம்மாண்டமான படம்தான். ஆனால், ‘டீன்ஸ்’ அதைவிடப் பிரம்மாண்டமாக என்னை உணர வைத்தது’ என்றார்.

‘டீன்ஸ்’ படத்தில் வரும் பதின்ம வயதுக் கதாபாத்திரங்கள் பழி வாங்குவதாக நினைத்துப் பெற்றோருக்குப் பாடம் புகட்டுகிறார்களா? - வாழ்க்கை நெடுகப் பாடம் நடத்தப்படுகிறது. ஆனால், பாடம் கற்றுக்கொண்டார்களா என்பது தான் கேள்வி. ‘வி ஆர் நாட் கிட்ஸ் எனிமோர்’ என்று புதிதாக மீசையும் ஆசையும் முளைக்கிற பருவத்தில், நண்பர்களாக இருக்கும் பள்ளி மாணவர்கள் சிலர் செய்யும் ஆபத்தான வெளிநடப்புதான் கதைக் களம்.

அந்த வெளிநடப்பின் வழியாகப் புதிய அனுபவத்தைப் பெற முயல்கிறார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஒரு பாடமாக மாறுகிறது. இது பெற்றோர்களை மையப்படுத்தாமல், பதின்மச் சிறார்கள் தங்களுக்கான சவால்களை அவர்களே எதிர்கொண்டு எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதைத்தான் நான் இதில் சொல்லியிருக்கிறேன். ஆனால், பெற்றோர்கள் விரும்பிப் பார்க்கிற ஒரு படமாக இது இருக்கும்.

முதல் முறையாக டி.இமானுடன் இணைந்திருக்கிறீர்கள்? - அவர் இந்தப் படத்துக்கு இசையமைத்து முடித்ததும் ‘டார்லிங் இமான்’ ஆக மாறிவிட்டார். ஒரு பாடல் என்று தொடங்கினோம். அவரது இசைக் கற்பனையின் வீச்சும் சோறு தண்ணியைச் சட்டை செய்யாத அவரின் சளைக்காத உழைப்பும் படத்தில் 7 கதை சொல்லும் பாடல்களாக மாறியிருக்கின்றன. இந்த ஒரு படத்துடன் நிற்க முடியாது என்கிற பிரமிப்பை உருவாக்கிவிட்டார்.

அதேபோல், தமிழரசன் ‘கல்கி’யைவிட பிரம்மாண்டம் என்றார் அல்லவா? அதற்குக் காரணமாக அமைந்தவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி. ‘ஜிகர்தண்டா’ முதல் பாகத்தின் ஒளிப்பதிவாளர். எனது நீண்ட கால நண்பர். செலவு அதிகம் வைப்பவர்தான் என்றாலும் ‘டெக்னிக்’கலாக ‘மேக்கிங்’கில் மிரட்டியிருக்கிறார்.

இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உங்களுடைய மகள் கீர்த்தனாவின் பங்களிப்பு குறித்து... நான் கதை சொல்லவோ, ஷாட் சொல்லவோ பயப்பட மாட்டேன். காரணம் பெருங்கூட்டத்தில் நான் அதி புத்திசாலி என நினைத்திருந்தேன். அந்த நினைப்பெல்லாம் கீர்த்தனாவின் ஆளுமையைக் காணும் வரைதான்.

மணிரத்னம் பள்ளியில் பயின்றவர் என்பதால், ‘இந்த இடத்தில் மணி சாராக இருந்தால் என்ன பண்ணுவார்? நீங்களா இருந்தால் என்ன பண்ணுவீர்கள்’ எனக் கேட்டு அவர் தந்த யோசனைகளில் வியந்து பயன்படுத்திக்கொண்டேன். அதேபோல், திரை எழுத்தில் மட்டுமல்ல, திரைப் பாடல் எழுதும் திறனிலும் அவர் தன்னை வளர்த்துக்கொண்டி ருக்கிறார். அவர் இயக்குநர் ஆகும் நாளை நானும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

‘இந்தியன்’ தாத்தாவுடன் ‘டீன்ஸ்’ பேரப் பிள்ளைகள் மோதுவது எதிர்பாராத ஒன்றா? - நான் கமல் சாரின் தீவிர ரசிகன் என்பது எல்லாருக்கும் தெரியும். அவரது ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்துடன் ‘புதிய பாதை’ ரிலீஸ் நாள்கள் நினைவுக்கு வருகின்றன. அவ்வளவு பெரிய ஒரு லெஜண்ட் நடிகருடைய படத்துடன், புதுமுகம் நடித்த, ஆனால் கதையம்சம் உள்ள ஒரு படத்தையும் மக்கள் ரசிப்பார்கள் என்கிற பொய்க்காத நம்பிக்கையின் அடிப்படையில்தான் ரிலீஸ் செய்தோம், சில விநியோகஸ்தர்கள் படத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள்.

ஆனால், இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. கமல் சாரின் படத்துடன் ‘டீன்’ஸை ரிலீஸ் செய்வதில் ஒரு கிரிமினல் ஐடியா இருக்கிறது. ‘இந்தியன் 2’ படத்தின் ‘ஓவர் ப்ளோ’ நமக்கு வரலாம். ‘இந்தியன் 2’ 800 திரையரங்குகளில் வெளியானால் ஏழைக்கேற்ற எள்ளுருண்டைபோல் 200 திரையரங்குகளில் ‘டீன்ஸ்’ வெளியாகி வரவேற்பைப் பெறும். இதில் மோதல் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அதில் கமல் சார் இந்தியன் தாத்தாவாக வருகிறார். இதில் நான் முறுக்கான முதியவனாக முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறேன். அந்தப் பள்ளிப் பிள்ளைகளை ஹீரோவாக மாற்றும் ஹீரோவாக வருகிறேன்.

- jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x