Published : 02 Nov 2022 06:37 AM
Last Updated : 02 Nov 2022 06:37 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ‘இடி’ சத்தத்துக்கு நாய் பயப்படுமா?

தீபாவளி அன்று வெடிச்சத்தம் கேட்டு எங்கள் வீட்டு நாய் நடுங்கிக்கொண்டு, சாப்பிடாமல் இருந்தது. தெருவிலும் நாய்களைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அதே நாய்கள் இதைவிடப் பெரிய சத்தமான ’இடி’க்கு ஏன் பயப்படுவதில்லை, டிங்கு?

- ஜெஃப் ஈவான், 6-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

தீபாவளியின்போது பட்டாசுகளை வெடிப்பார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அப்படியும் வெடிச் சத்தத்தைக் கேட்ட உடன், நம் உடல் பதறுகிறது அல்லவா? நாய்களுக்கு நம்மைவிடக் கேட்கும் திறன் அதிகம். தீபாவளிக்குப் பட்டாசுகளை வெடிப்பார்கள் என்றெல்லாம் நாய்க்குத் தெரியாது. அதனால், திடீரென்று வெடிச் சத்தத்தைக் கேட்ட உடன், தனக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து பயப்படுகிறது. பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்று ஒளிந்துகொள்கிறது. ஒருவேளை அடிக்கடி இந்த வெடிச் சத்தத்தைக் கேட்டுப் பழகிவிட்டால், பயப்படாது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நாய்கள் வெடிச் சத்தத்தைக் கண்டு பயப்படுவதில்லை. வேட்டைக்குச் செல்லும் நாய்களும் வெடிச் சத்தத்துக்குப் பயப்படுவதில்லை. இடி இடிக்கும்போதும் பெரும்பாலான நாய்கள் பயப்படுகின்றன. ஒரு பகுதியில் அடிக்கடி இடி இடித்தால், அது பழகிவிட்டால், அந்தச் சத்தத்தின் மூலம் ஆபத்து இல்லை என்பதை உணர்ந்தால், நாய்கள் பயப்படாது, ஜெஃப் ஈவான்.

மனிதர்களுக்கு மேல் கண் இமை மூடுகிறது. கோழிகளுக்கு மட்டும் கீழ் இமை மூடுகிறதே ஏன், டிங்கு?

- பா. ஆதீஸ்வரன், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நல்ல கேள்வி. கோழிகளுக்கு மூன்று இமைகள் இருக்கின்றன. மேல் இமை, கீழ் இமை தவிர, இமைகளுக்கும் கண்ணுக்கும் இடையில் சவ்வு போன்ற ஒரு படலம் இருக்கிறது. பொதுவாகக் கோழிகள் மனிதர்களைப் போல இமைகளை மூடுவதில்லை. இமை செய்யும் பணியை, சவ்வுப் படலம் செய்கிறது. கண்ணின் பக்கவாட்டிலிருந்து அடிக்கடி வந்து, கண்களைச் சுத்தப்படுத்துகிறது. ஈரத்தன்மையுடன் வைத் திருக்கிறது. கண்களைத் தூசி, அழுக்கு போன்றவற்றிலிருந்து காப்பாற்றுகிறது. அதனால் இமைகளின் வேலை குறைந்துவிட்டது. நீங்கள் சொல்வதுபோல கோழிகள் கீழ் இமைகளைத்தான் மூடுகின்றன. மேல் இமைகளை மிகக் குறைவான அளவே அசைக்க முடியும், ஆதீஸ்வரன்.

என் தலையில் பேன்கள் எப்படி வந்திருக்கும், டிங்கு?

- கோ.வி. அவந்திகா, 6-ம் வகுப்பு, அ.உ.நி. பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.

தலையில் வாழும் பேன்கள் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. மனிதத் தலையில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவை. பேன்கள் பொதுவாக ஒருவரின் தலைமுடியிலிருந்து மற்றொருவரின் தலைமுடிக்கு நேரடியாகப் பரவும். பள்ளியில் அருகருகே தோழிகளுடன் அமர்ந்திருக்கும்போது, ஒருவர் தலை மீது இன்னொருவர் தலையைச் சாய்க்கும்போது பேன் பரவிவிடும். தலைமுடி சுத்தமாக இல்லை என்றால் பேன் வரும், சுகாதாரமான சூழலில் வாழவில்லை என்றால் பேன் வரும் என்றெல்லாம் சொல்வதில் உண்மை இல்லை. பேன்கள் நோய்களைப் பரப்புவதும் இல்லை, அவந்திகா.

ஓ ஹென்றி கதைகளின் முடிவுகள் ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் இருக்கும் என்று ஆசிரியர் சொன்னார். அதிலிருந்து எனக்கும் அந்தக் கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. தமிழில் வெளிவந்திருக்கிறதா, டிங்கு?

- டி. சுபாஷினி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

உங்கள் ஆசிரியர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் சுபாஷினி. முடிவு ஆச்சரியமாக இருப்பதோடு, கதையும் மிக சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். ‘சிறுகதை எழுத்தின் தந்தை’ என்று ஓ ஹென்றியைக் குறிப்பிடுவார்கள். மிகச் சிறந்த சிறுகதைகளுக்கு இவர் பெயரில் பரிசும் வழங்கப்படுகிறது. The Gift of the Magi, The Ransom of Red Chief, The Cop and the Anthem ஆகிய கதைகளைப் படித்தால், உலகம் ஏன் ஓ ஹென்றியைக் கொண்டாடுகிறது என்பது உங்களுக்கே தெரிந்துவிடும். அமெரிக்கரான ஓ ஹென்றியின் பெயர், வில்லியம் சிட்னி போர்ட்டர். வ.உ.சி. நூலகம், புதுப்புனல் போன்ற சில பதிப்பகங்கள் ஓ ஹென்றியின் கதைகளைத் தமிழில் வெளியிட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x