Published : 13 Mar 2022 11:31 AM
Last Updated : 13 Mar 2022 11:31 AM

வாசகர் வாசல் | நிழல் தலைவர்கள் அல்ல

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கானல்நீராக இருக்கும் நிலையில் தமிழக உள்ளாட்சியில் கிடைத்திருக்கும் 50 சதவீத ஒதுக்கீடு என்பதே சாதனைதான். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து 20 மாநகராட்சிகளில் 11 இடங்களில் பெண்கள் மேயராகப் பொறுப்பேற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இதில் சிலர் மேயர் பொறுப்பு வகிக்கும் முதல் பெண்கள் என்கிற வரலாற்றைப் படைத்திருப்பதும் பெருமிதமே. ஆனால், இவர்கள் அனைவருமே எவ்விதத் தலையீடும் இல்லாமல் பணியாற்ற முடியுமா என்கிற கேள்வி எழாமல் இல்லை. காரணம், ஊராட்சித் தேர்தலில் தங்கள் வீட்டு ஆண்கள் பொறுப்பேற்றுச் செயல்பட தேர்தலில் வென்ற பெண்கள் கையெழுத்துப் போடும் வேலையை மட்டும் செய்வது நாம் அறிந்ததே. அப்படியிருக்க, மேயர் என்பது நகரையே கட்டிக் காக்கும் பெரும் பொறுப்பு. இதைக் காரணம்காட்டியே கட்சித் தலைமையும் வீட்டு ஆண்களும் பெண்களைச் செயலாற்ற விடாமல் முடக்குவதற்கான சாத்தியமும் உண்டு. ‘நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்; களத்தில் இறங்கிச் செயலாற்றுவோம்’ என்று சில பெண் மேயர்கள் தங்கள் நேர்காணலில் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி. அது செயல்படுத்தப்பட்டால் மட்டுமே பெண்களின் கையில் அரசியல் அதிகாரம் இருக்கிறது என்று பொருள். இல்லையெனில் நாம் மேலும் 11 கைப்பாவைகளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றாகிவிடும்.

- மலர், கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x