Published : 31 Oct 2013 10:15 AM
Last Updated : 31 Oct 2013 10:15 AM
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற ஒருவாரம் உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்பாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் துணைவேந்தர்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப் பாட்டின்கீழ்தான் இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான பல்கலைக்கழக தொழில்நிறுவன கூட்டு மையத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த பி.மன்னர் ஜவகர் 2008 ஜூன் முதல் 2012 ஜூன் வரை துணைவேந்தராக இருந்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி அவரது பணிக்காலம் 2011- ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில் அவருக்கு ஓராண்டு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மன்னர் ஜவகர் 2012 ஜூன் வரை 4 ஆண்டுகள் துணைவேந்தராக பணியாற்றினார். அதன்பிறகு பல்கலைக்கழக தொழில்நிறுவன கூட்டு மையத்தில் பேராசிரியராக பணிபுரிந்துவந்தார்.
திடீர் சஸ்பெண்ட்
பல்கலைக்கழக பேராசிரி யர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். அதன்படி, பேராசிரியர் மன்னர் ஜவகர் வருகிற 3-ம் தேதி ஓய்வுபெற இருந்தார்.
இந்த நிலையில், அவர் கடந்த 28-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான நடவடிக்கைக்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு உத்தரவு ஆணை அவருக்கு 28-ம் தேதி வழங்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத பல்கலைக்கழக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பணிஓய்வுபெற ஒரு வாரம் உள்ள நிலையில், முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது அண்ணா பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
காரணம் என்ன?
அவர் துணைவேந்தராக பணியாற்றிய காலத்தில் செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்பாக அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT