Last Updated : 03 Oct, 2024 03:17 PM

 

Published : 03 Oct 2024 03:17 PM
Last Updated : 03 Oct 2024 03:17 PM

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 8: சுற்றுச்சூழலுக்கு உகந்த சாக்லெட்!

ஹென்றி நெஸ்லே சாக்லெட்டில் ஒரு புதுமையை உருவாக்கினார். பாலை அடிப்படையாகக் கொண்ட ‘மில்க்’ சாக்லெட்டை அறிமுகப்படுத்தினார். எப்படியும் சாக்லெட் தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில் பால் சேர்க்கப்படுகிறது, பின்பு ஏன் ஆரம்பத்திலேயே கோகோ பொடியோடு பாலைச் சேர்க்கக் கூடாது என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. ஆனால் பாலில் உள்ள நீர், இதற்குத் தடையாக இருந்தது. சாக்லெட்டின் திடத் தன்மைக்கு எதிராகச் செயல்பட்டது. என்றாலும் பால் பவுடர் (கன்டென்ஸ்டு மில்க்) அறிமுகமானதற்குப் பிறகு இந்தப் பிரச்சினை தீர்ந்தது.

1912ஆம் ஆண்டில் உலக சாக்லெட் ஏற்றுமதியில் 55% பெற்று முன்னணியில் விளங்கத் தொடங்கியது சுவிட்சர்லாந்து. அந்தத் தேசத்தின் மாட்டுப் பண்ணைகளுக்குப் புதிய ‘டிமாண்டு’ ஏற்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்குச் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. சுவிட்சர்லாந்தின் மற்றொரு பங்களிப்பு ‘மெல்ட்டிங் சாக்லெட்’. அதாவது உள்பகுதிக்குப் பதிலாக சாக்லெட்டின் மேல்பகுதி நாக்கில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மை கொண்டது இந்த ‘மெல்டிங் சாக்லெட்’.

பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாக்லெட்டில் சேர்க்கப்பட்டது சுவைக்காக அல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இறக்குமதிக்குப் பலவித தடைகள். ஆனால், சாக்லெட் விற்பனையின் அளவு மட்டும் குறையவில்லை. அப்போதுதான் பாதாம்பருப்பு, தேன், பழங்கள் போன்றவற்றைச் சாக்லெட்டில் கலக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் இதற்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டானது. நவீன இயந்திரங்கள் அறிமுகமான பின் சுவிட்சர்லாந்து நாட்டுச் சாக்லெட்டுகளுக்கு மேலும் கிராக்கி ஏற்பட்டது.

சாக்லெட் டூரில், தொழிற்சாலையில் சாக்லெட் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறார்கள். சில நேரம் பார்வையாளரும் சாக்லெட் உருவாக்கத்தில் பங்குக் கொள்ள முடியும். இறுதியில் ஒவ்வொருவருக்கும் சாக்லெட் ஒன்று அளிக்கப்படுகிறது. மற்றோர் அரங்கில் சாக்லெட் தொழிற்சாலையில் உருவாகும் அத்தனை தயாரிப்புகளின் ‘மாதிரிகள்’ வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அங்கேயே சாப்பிட வேண்டும். ஏனென்றால், சாப்பிட்டப் பிறகு பார்வையாளர்கள் அங்கிருக்கும் விற்பனைக் கூடத்தில் சாக்லெட்டுகளை வாங்கிச் செல்வார்கள் என்கிற வணிக நோக்கத்தில்தான்!

சாக்லெட் சாப்பிடுவது பல்லுக்குக் கெடுதல், ‘மைக்ரேன்’ ஏற்படலாம், கொழுப்புச் சத்து அதிகம் என்றெல்லாம் கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும் அண்மையில் சாக்லெட் தொழில் இறங்கு முகத்தைச் சந்தித்ததாகத் தெரியவில்லை. காரணம், சாக்லெட் எளிமையானது. ‘சாக்லெட்’ என்கிற வார்த்தையே உமிழ்நீரை வாயில் சுரக்க வைத்துவிடும்!

போப் ஆண்டவர் ஒருமுறை, “விரத நாள்களில் சாக்லெட் உட்கொள்வதில் தவறில்லை" என்று கூற, சாக்லெட்டின் அங்கீகாரமும் விற்பனையும் ‘ஜிவ்வென்று’ ஏறியதாம். ஸ்விஸ் விஞ்ஞானிகளுடன் அந்நாட்டின் சாக்லெட் தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய வகை சாக்லெட்டைத் தயாரித்திருக்கிறார்கள். இதில் சர்க்கரைக்குப் பதிலாகத் தாவரத்தின் சாற்றையும் கோகோவின் உமியையும் கலப்பதன் மூலம் இனிமையான நார்ச்சத்து கொண்ட பொருள் ஒன்று உருவாக, அதைச் சர்க்கரைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சத்து அதிகம் என்பதோடு, தயாரிக்கக் குறைந்த அளவிலான நீரே போதும். அதுமட்டுமன்றி, சர்க்கரைத் தயாரிப்புப் பணிகள் அதிக அளவில் பசுமைக் குடில் வாயுக்கள் உருவாக வழி செய்யும் என்பார்கள். எனவே, அதற்குப் பதிலாக இந்தப் புதிய முறை தீர்வாக இருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x