Published : 23 Sep 2024 12:48 PM
Last Updated : 23 Sep 2024 12:48 PM

கலீலியோ கலிலி | விஞ்ஞானிகள் - 1

ஆர்வமும் உழைப்பும் இருந்தால் விஞ்ஞானி ஆகலாம். கலீலியோ கலிலி மருத்துவம் படிக்கச் சேர்ந்தார். ஆனால், கணிதத்தைப் படித்தார். பின்னர் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவானார். இத்தாலியில் பிறந்தார் கலீலியோ. பத்து வயதுவரை பைசா நகரத்தில் வளர்ந்தார். வீட்டிலிருந்தே படித்தார். ஃபிளாரன்ஸ் நகரத்திற்குக் குடிபெயர்ந்ததும் பள்ளியில் சேர்த்தனர். அங்கு மத போதகராகலாம் என நினைத்தார். ஆனால், மகனை மருத்துவராக்கும் கனவோடு மீண்டும் பைசாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் சேர்த்தார் கலீலியோவின் அப்பா.

கல்லூரியில் எந்தத் துறையைப் படித்தாலும் அரிஸ்டாட்டிலைப் படிக்க வேண்டும். கலீலியோ விரும்பிப் படித்தார். ஆனால் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்விகளை எழுப்பினார். ஆனால் பதில் கிடைக்கவில்லை. தந்தையின் விருப்பம் என்பதால் மருத்துவப் படிப்பைக் கைவிட முடியவில்லை. பாடங்களில் தோல்வியடைந்தார். ரிச்சி என்கிற கணித மேதையின் வகுப்பை மறைந்திருந்து கேட்டார் கலீலியோ. மருத்துவ மாணவர் தன் வகுப்பைக் கவனிக்கிறாரே என வகுப்பிற்குள் அனுமதித்தார். கணிதத்தில் தேர்ச்சிகொள்ள வைத்தார். கணித ஆய்வு கட்டுரையை வெளியிட்டார் கலீலியோ. தன் கல்லூரியிலேயே கணித பேராசிரியரானார். மீண்டும் அரிஸ்டாட்டிலின் கருத்துகளை எதிர்த்ததால் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

படுவா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். அங்குதான் அவர் ஆராய்ச்சியின் மீது ஆர்வம்கொண்டார். ஒரு முறை தேவாலயத்துக்குச் சென்றபோது, அங்கு மேலே தொங்கிய விளக்கு காற்று அதிகமானால் வேகமாக ஆடியது. காற்று குறைந்தால் மெதுவாக ஆடியது. வேகமாக ஆடும்போது எவ்வளவு நேரமாகிறது என்பதைக் கணக்கிட்டார். மெதுவாக ஆடும்போதும் அதே நேரம்தான் ஆனது. ஊசலின் அலைவுநேரம் கயிறின் நீளத்தைப் பொறுத்தது என்று கண்டறிந்தார். ஒன்றில் இரும்பையும் மற்றொன்றில் தக்கையையும் கட்டி ஆட்டிவிட்டார். அதிக எடையுள்ள இரும்பும் எடைகுறைந்த தக்கையும் ஒரே நேரத்தில் ஊசலாடின. நேரம் ஒன்றுதான். உயரம் குறையக் குறைய வேகம் கூடும். கயிற்றின் நீளத்தை மாற்றினால் தவிர, வேகத்தில் மாற்றமிருக்காது என்று ஆய்வு கட்டுரை யைவெளியிட்டார். இப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட பெண்டுலம்தான் கடிகாரம் உருவாகக் காரணம்.

பைசா கோபுரத்திலிருந்து இரும்பையும் இறகையும் போட்டால் இரண்டும் ஒரே நேரத்தில்தான் பூமியை வந்தடையும் என்று ரூபித்தார். அடுத்து லென்ஸ் பக்கம் கவனத்தைத் திருப்பினார். ஹாலந்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த லென்ஸ் ஒரு பொருளை மூன்று மடங்கு பெரிதாகக் காட்டியது. கலிலீயோ அதில் சில மாற்றங்களைச் செய்து ஒன்பது மடங்கு, இருபது மடங்கு பெரிதாகக் காட்டினார். அதன்வழியே பலரும் கப்பலையும் தேவாலயத்தையும் பார்த்தனர். கலீலியோ தன் லென்ஸைத் தொலைநோக்கியில் வைத்து வானை ஆராய்ந்தார்.

நிலவைச் சுற்றி இருக்கும் மேடு பள்ளங்கள், வியாழனைச் சுற்றி இருக்கும் சந்திரன்களைக் கண்டறிந்தார். கோப்பர் நிக்கஸ் சூரியன்தான் மையம். அதைத்தான் மற்ற கோள்கள் சுற்றுகின்றன என்றார். திருச்சபை அரிஸ்டாட்டிலை நம்பியதால் கோப்பர் நிக்கஸின் புத்தகத்தைத் தடைசெய்திருந்தது. ஆனால், கலீலியோ கோப்பர் நிக்கஸின் கண்டுபிடிப்பு உண்மை என்று உரக்கப் பேசினார். தேவாலயத்தின் கண்டனத்தைப் பெற்றார்.

சூரியனை மையமாக வைத்து மற்ற கோள்கள் சுற்றுவதை கலீலியோ புத்தகமாக எழுதி வெளியிட்டார். அதற்காக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி ஹாலந்தில் பிரசுரிக்க வைத்தார். அந்தப் புரட்சிகர கட்டுரையால் தேவாலயம் இன்னும் கோபமானது. பத்தாண்டுகள் வீட்டுச் சிறையிலிருந்து மறைந்து போனார் கலீலியோ.

- கட்டுரையாளர், எழுத்தாளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x