Published : 30 Aug 2024 06:42 AM
Last Updated : 30 Aug 2024 06:42 AM

இயக்குநரின் குரல்: மலை என்பது நம்பிக்கை!

“சுயநலத்தின் கோரப்பசிக்குச் சக மனிதனைப் பலியாக்குவது ஆதியிலிருந்து தொட்டுத் தொடரும் மனித இயல்பாக இருந்து வருகிறது. தற்போது, சுற்றுச்சூழலையும் அவன் பலி கேட்கும்போது, அதற்கு இயற்கையின் பதில் என்னவாக இருந்தது என்பதுதான் இந்தப் படம்” என்று பேசத் தொடங்கினார் ‘மலை’ படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ஐ.பி.முருகேஷ். லட்சுமி மேனன், யோகிபாபு, காளி வெங்கட் நடிப்பில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, இமான் இசை, யுகபாரதியின் வரிகள் என உருவாகியிருக்கும் இப்படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

ஐ.பி.முருகேஷ்

சுற்றுச்சூழலைக் கதைக்களமாகக் கொண்டு முதல் படத்தை இயக்க வேண்டும் என ஏன் நினைத்தீர்கள்? - எனக்கு இயற்கையுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது பிடிக்கும். மலையைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கைப் பிறக்கும். ஆறுதல் கிடைக்கும். நான் மதுரைக்காரன் என்பதால் அருகிலிருக்கும் மேற்கு மலைத் தொடரில் உள்ள ஊர்களுக்கு வாய்ப்பு அமையும்போதெல்லாம் பயணம் செய்வேன்.

அப்படி மீண்டும் மீண்டும் மலையூர்களுக்குச் செல்லும்போது ஓரிடத்தில் முந்தைய முறை பார்த்த ஒரு மலையையே காணோம். அப்போது நம் வீட்டில் இருந்த ஒருவரை இழந்ததைப்போல் துக்கம் மனதை அழுத்தியது. தவிர, நான் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல் மலைப் பகுதிகளுக்குச் செல்வதில்லை.

மலை மக்களோடு நெருங்கிப் பழகிவிடுவேன். அப்படி நான் பார்த்த ஓர் உண்மையான மனிதரையே யோகிபாபு இப்படத்தில் ஏற்று நடித்துள்ள சுருளி கதாபாத்திரமாக எழுதியிருக்கிறேன். அந்த உண்மையான மனிதருடன் தொடர்புடைய ஓர் உண்மைச் சம்பவத்தையே இதிலும் கிளைமாக்ஸ் ஆக வைத்திருக்கிறேன்.

என்ன கதை, எங்கே நடக்கிறது? - போடியின் உள்பகுதி மலையூர்களான கொட்டக்குடி, குரங்கணியில் நடக்கிறது. பொதுவாக மருத்துவ வசதியில்லாத மலைக் கிராமங்களில் அங்கே வசிக்கும் ஒருவரே, காய்ச்சல், வயிற்றுவலி, வாந்திபேதி போன்ற பிரச்சினைகளுக்கு ஊசிபோட்டு, முதலுதவி செய்யும் கிராமத்து கம்பவுண்டர்போல இருப்பார்.

கதையில் அப்படியொருவர்தான் யோகி பாபு. அந்த ஊருக்குப் பொதுச் சுகாதார நிலையம் வந்தபிறகு மருத்துவராக வருகிறார் லட்சுமி மேனன். இருவருக்கும் தொடக்கத்தில் மோதல்தான்.

ஆனால், அங்குள்ள இயற்கையையும் யோகி பாபுவின் தேவையையும் உணரும்போது அவர்களிடையே நட்பு பூக்கிறது. அதேநேரம், பொதுச் சுகாதார நிலையத்துக்கு காளி வெங்கட் உருவத்தில் சிக்கல் வருகிறது. அது என்ன, அதிலிருந்து மலையூர் மக்களை இந்த இருவரும் காப்பாற்றினார்களா, இல்லையா என்பது கதை.

இந்தக் களத்தில் நகைச்சுவைக்கு இடமிருக்கிறதா? - இல்லை. மலை வாழ்க்கையில் வெளிப்படும் இயல்பான சின்ன சின்ன நகைச்சுவை இருக்கும். நகைச்சுவை உணர்வை முதன்மைப்படுத்த முடியாத பெண் மையக் கதை இது. அதில் யோகிபாபு ஒரு முதன்மைக் கதாபாத்திரமாக வருகிறார். கதையை முதலில் லட்சுமி மேனனுக்குச் சொன்னேன். அப்போது ‘சுருளி’ கேரக்டரில் நடிப்பது யார் என்று கேட்டார்.

‘யோகி பாபு’ என்றதும் அவருக்கு டபுள் ஓகே. யோகி பாபு படு பிஸி என்பதால், அவர் எப்போதெல்லாம் பிரித்துப் பிரித்து கால்ஷீட் கொடுத்தாரோ அப்போதெல்லாம் லட்சுமி மேனன் வந்து ‘மலர்’ கதாபாத்திரமாக வாழ்ந்து கொடுத்துவிட்டுப் போனார். காளி வெங்கட் ரசிகர்களுக்கு எதிர்பாராத ஓர் அதிர்ச்சியைக் கொடுப்பார்.

தயாரிப்பாளர்கள் பற்றி.. ‘புளூ ஸ்டார்’ படத்தைத் தயாரித்த லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவன உரிமையாளர்கள் ஆர்.கணேஷ்மூர்த்தி - சவுந்தர்யா தம்பதி படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். மலையூரில் நிகழ்ந்த அடுத்தடுத்த நிலச்சரிவுகளால் நாங்கள் படப்பிடிப்புக்குப் போக வேண்டிய சாலைகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் இழப்புகளைப் பொருள்படுத்தாமல், பொறுமை காத்துப் படக்குழுவுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். அவர்களுக்கு ‘புளூ ஸ்டார்’ கொடுத்த நற்பெயரை ‘மலை’ மேலும் உயர்த்தும்.

- jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x