Published : 19 Jul 2024 06:11 AM
Last Updated : 19 Jul 2024 06:11 AM

சினிப்பேச்சு - வள்ளியம்மா பேராண்டி!

இயக்குநர் பா.ரஞ்சித் உருவாக்கிய ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் வழியாகக் கவனம் பெற்றவர் ‘தெருக்குரல்’ அறிவு என்கிற அறிவரசு. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தமிழ் பாப் மற்றும் ராப் கலவையில் உருவாகி யூடியூப் வழியாக பல கோடிப் பார்வையாளர்களைச் சென்றடைந்த தனியிசைப் பாடல் ‘எஞ்சாயி எஞ்சாமி'. அப்பாடலை தீக்‌ஷிதாவுடன் இணைந்து பாடி, அதன் காணொலி வடிவத்திலும் நடித்துப் புகழ்பெற்றார்.

‘எஞ்சாயி எஞ்சாமி' பாடலில் ‘வள்ளியம்மா பேராண்டி’ என்கிற வரியைச் சேர்ந்திருந்தார். தற்போது அதையே தலைப்பாகக் கொண்டு, தனது ‘ஹிப் ஹாப்’ தனியிசைத் தொகுப்பின் முதல் பாகத்தை வெளியிட்டிருக்கிறார். 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பல பாடல்கள் தான் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் விதமாக இருக்கும் என அறிவு தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் இந்த இசைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் பா.ரஞ்சித், சிவகாமி ஐ.ஏ.எஸ்., முன்னணிக் கதாநாயகி துஷாரா விஜயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

கடவுளின் மறுபக்கம்! - புராணமும் தற்காலமும் இணையும் கதைக் களத்தை, நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டே தரமான கிராஃபிக் - வி.எஃப்.எக்ஸ் மூலம் கொடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் ‘சதுர்’ தமிழ்ப் படத்தின் ட்ரைலர்.

‘கடவுளின் வெளித் தெரியாத பக்கம்’ என்பதையே கதைக் கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வென்சர் படத்தை ராக்ஸ் நேச்சர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ராம் மணிகண்டன் தயாரித்துள்ளார். அகஸ்டின் பிரபு எழுதி, இயக்க, ராம் டி.சந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசினார்: “ட்ரைலரைப் பார்த்துவிட்டு வியந்துவிட்டேன். அளவான பட்ஜெட்டில் கதையிலும் காட்சியமைப்பிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தைக் கொண்டு வர முடியும் என்று காட்டியிருக்கும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

பூங்காவில் காத்திருக்கும் ஆவி! - கடந்த ஏப்ரலில் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டு களைப் பெற்ற படம் ‘ஒரு நொடி’. அப்படத்தின் நாயகன் தமன் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘பார்க்’ -ஆவியை மையப்படுத்திய படம். இதில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர், கடந்த மாதம் வெளியாகி கவனம் ஈர்த்த ‘லாந்தர்’ படத்தின் நாயகியான ஸ்வேதா டோரத்தி.

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத் தில் நடந்தது. அதில் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். படம் குறித்து இயக்குநர் பேசும்போது: “இதுவொரு ஹாரர் த்ரில்லர் படம். தமன் - ஸ்வேதா டோரத்தி இணை பேசப்படும்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரை வைத்து இரண்டு குறும்படங்களை இயக்கினேன். அவற்றை யூடியூபில் வெளியிட்டுப் பல லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந் ததில் கணிசமான அளவுக்கு வருமானம் வந்தது. அதைப் பார்த்த தயாரிப்பாளர் என்னிடம் இருக்கும் பல கதைகளைக் கேட்டு, அதிலிருந்து ‘பார்க்’ கதையைத் தேர்வு செய்தார்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x