Last Updated : 28 Jun, 2024 11:14 AM

 

Published : 28 Jun 2024 11:14 AM
Last Updated : 28 Jun 2024 11:14 AM

ஏன், எதற்கு என்று கேள்வி கேளுங்கள்!

சக்ஸஸ் ஃபார்முலா - 6



ஆபிஸ் முடிந்து ரூமிற்கு வந்த சச்சு விட்டத்தைப் பார்த்து ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். எண்ணங்கள் எல்லாம் ஏதோ ஓர் இடத்தில் முட்டிக் கொண்டு நின்றுவிட்டது போல் முகம் வாடியிருந்தது.

“நஸீ, உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்.”

“ம்ம்…கேளு” என்று சொன்னவுடன் மடைத் திறந்த நதிபோல் ஆபிஸில்டந்த குழப்பங்களை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லி முடித்தார்.

“க்ளையண்ட் என்ன எதிர்பார்க்கிறாரென்று கேட்டீயா?”

“இல்ல.”

“உன் டீம்ல நீ என்ன செய்தால், அந்தப் பிரச்சினை சரி பண்ணலாமென்னு கேட்டீயா?”

“இல்ல.”

“இப்ப மட்டும் என்கிட்ட ஏன் கேட்கணும்னு தோணிச்சு?”

“நீ என் ஃப்ரெண்ட், சொதப்பனாகூட எதுவும் நினச்சிக்க மாட்டே.”

சச்சு போல் நம்மில் பலர் கேள்வி கேட்பதை ஒரு கலையாகப் பார்ப்பதில்லை. அதைத் தெரிந்து கொண்டால் சரியான தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்கும் என்கிற புரிதலும் இல்லை. தகவல்கள் அறிவைக் கொடுக்கும். அறிவு நம் வேலையைச் சுலபமாக்கும்.

வாழ்க்கை என்றாலே அவ்வப்போது பிரச்னைகளால் ஷட் டவுன் ஆவது இயல்பு. அதிலிருந்து மீண்டும் இயங்க கேள்வி கேட்டால் மட்டுமே வழி கிடைக்கும்.

இதைத்தான் திருவள்ளுவர் நறுக்கென்று இரண்டு வரியில் சொல்லி இருக்கிறார்.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

அதாவது செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும். அப்படிப்பட்ட செல்வத்தைப் பெறக் கேள்வி கேட்க கற்றுக் கொள்ள வேண்டும்.

செறிவான கேள்விகளைக் கேட்பதால் செழுமையான செல்வம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் செல்வந்தராக வேண்டுமென்றால் இந்தப் பத்து வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1. யார் என்ன நினைப்பார்களோ என்று வரும் தயக்கங்களையும் முட்டாளாகத் தெரிந்துவிடுவோமோ என்கிற கவலையையும் புறம்தள்ளுங்கள்.

2. கேள்வி கேட்க முடிவெடுத்தவுடன். மனதில் அதைச் சரியான கேள்வியாக உருவாக்குங்கள். உங்களுக்குத் தேவையான விடை கிடைக்கச் சரியான கேள்வி முக்கியம்.

3. எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்பேன் என்று உப்புச்சப்பிலாத கேள்விகளைக் கேட்க வேண்டாம்.

4. ஏன் என்கிற கேள்விக்குத் தெளிவு கொடுக்கும் சக்தி இருக்கிறது. இரண்டு வார்த்தைதான் என்றாலும் அதன் வீரியம் அதிகம். “ஏன் நான் இதைச் செய்ய வேண்டும்? ஏன் இது மாதிரி நடக்கிறது? ஏன் நான் இப்படி யோசிக்கக் கூடாது? இப்படித் தேவைப்படும்போது பல ‘ஏன்’களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

5. கேட்கும் கேள்விக்கு ஆம், இல்லை என்பது போன்ற பதிலாக இல்லாமல் இருக்க வேண்டும்.

6. மேலே சொன்ன ஏன் என்கிற கேள்விக்கு இருக்கும் அதே வீரியம் எப்படி, எதற்கு என்கிற கேள்விகளுக்கும் உண்டு. உதாரணத்திற்கு,“இந்த வேலையை எப்படிச் செய்தால் சிறப்பாகச் செய்ய முடியும்? “. “எதற்காக இந்த விஷயம் என்னைத் தொந்தரவு செய்கிறது என்று கேட்டுப் பாருங்கள். தீர்வின் முதல் படியை அடைந்துவிடுவீர்கள்.

7. மற்றவர்களிடம் எப்படிக் கேள்வி கேட்பது முக்கியமோ, உங்களிடமும் நீங்கள் கேள்வி கேட்டுப் பழகுங்கள். கேள்வி கேட்காத மனதைச் சோர்வின் பாதாளத்திற்குக் காலம் இழுத்துச் செல்லும். எடுத்துக்காட்டாக, ‘அடுத்து என்ன செய்ய வேண்டும்? வேறு என்ன வழி? இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்?’ என்று கேட்கலாம். ரமண மஹரிஷி,”நான் யார்?” என்று கேட்டதால்தான் ஞானியானார்.

8. தெரியாததைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாதவரை எந்த விஷயமும் அவமானம் இல்லை என்று உணர வேண்டும்.

9. தேவையான நேரத்தில் உற்றார், நண்பர்களிடம் உதவி கேளுங்கள். அது உங்களை ஆசுவாசப்படுத்தும்.

10. தேடலுக்கான திறவுகோலாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் ஒரு வழி கிடைக்கும் என்று நம்புங்கள்.

இன்றிலிருந்து சச்சுவைப் போல சரியான கேள்விகளைக் கேட்டு செழுமையாக வாழுங்கள்.


கட்டுரையாளர், எழுத்தாளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x