Last Updated : 14 Jun, 2024 01:56 PM

 

Published : 14 Jun 2024 01:56 PM
Last Updated : 14 Jun 2024 01:56 PM

நீங்களும் சி.இ.ஓ. ஆகலாம்! | சக்ஸஸ் ஃபார்முலா - 4

அலுவலகத்தில் அன்று வழக்கத்தைவிடப் பரபரப்பு அதிகமாக இருந்தது. சச்சுவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பரபரப்பைவிடப் பதற்றம்தான் தூக்கலாக இருந்தது. நாங்கள் இருவரும் வெவ்வேறு டீம் என்பதால் அவர் பதற்றத்திற்கான காரணம் அப்போது எனக்குத் தெரியவில்லை. அலுவலகம் முடித்து வீட்டுக்குப் போகும் வழி முழுக்க அவள் புலம்பல் நின்றபாடில்லை.

“என் டீம்ல இருக்கானே அந்த அருண், அவனால நான் திட்டு வாங்கினேன். அந்தப் பொண்ணு பார்க்கதான் பந்தாவா இருக்கும், அதையெல்லாம் டீம்ல வச்சுகிட்டு என் உயிர் போகுது…”

இப்படி ஒருவரையும் விட்டுவைக்காமல் திட்டித் தீர்த்தார். அவர் டீமால் சொன்ன நேரத்திற்கு வேலையைச் செய்து முடிக்க முடியவில்லை என்பதுதான் காரணம்.

“என்ன நஸீ, நான் பேசிட்டே வரேன், நீ எதுவும் பேசாம வர்ற?”

“ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல சச்சு.”

“என்ன இப்படிச் சொல்லிட்ட, ரெண்டு வார்த்த ஆறுதலா சொன்னாதான் என்ன?”

“ஆறுதல் எல்லாம் சொல்ல முடியாது. இனி இப்படி நீ புலம்பாம இருக்க ஒரு வழி இருக்கு. அதுக்கு முன்னாடி என் கேள்விக்குப் பதில் சொல்லு. அந்த மீட்டிங் நடப்பதற்கு முன்பு நீ ஏன் எல்லாம் செக் பண்ணல? யார் யார் வேலை முடிச்சிருக்காங்க, முடிக்கலைன்னு பார்த்திருக்கலாமே?”

“அது வந்து...”

“நீ அந்தப் பொறுப்ப முழுசா எடுத்துக்கல. அவ்ளோதான். அதான் சுத்தி இருக்கும் எல்லார் மேலயும் பழியும் கோபமும் வருது. பொறுப்புகள் எடுக்காதவரை சாக்குப்போக்குகள் நம் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடும் சச்சு. அப்பறம் கடைசிவரை நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டதுக்கு அடுத்தவர்களைப் பொறுப்பாளிகளாக்கிவிட்டு, நாம் செல்லாத காசாகிவிடுவோம். இனி சொல்லப் போகும் பத்து விஷயத்தைக் கேட்டா நீதான் உன் வாழ்க்கையின் சி.இ.ஓ.”

1. எது நடந்தாலும் அது நம் செயல்களின் விளைவு என்பதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. சுற்றி இருப்பவர்கள் மீது பழி போடுவது என்றைக்கும் நம் மேன்மைக்கு உதவாது என்பதை உணர்ந்து பொறுப்போடு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
3. எனக்கு நேரமில்லை, நான் சூழ்நிலைக் கைதி போன்ற சாக்குப்போக்குகளுக்கு என்றைக்கும் வாழ்க்கையில் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். நேரமில்லை என்று சொல்பவனுக்கு நேரத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று அர்த்தம்.
4. இப்போது எது நடந்திருந்தாலும் அது நம் செயல்களின் விளைவு என்று புரிந்து, இனி இக்கணம் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
5. ஒரு செயல் சரியாகச் செய்யவில்லை என்பதால் எல்லாச் செயலும் அப்படித்தான் போகும் என்பது போன்ற தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
6. நாம் எந்தச் சூழலில் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பது முக்கியம். சுற்றி இருப்பவர்கள் மேல் சுமையைப் போடாமல், நாம் என்ன செய்தால் சரிசெய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்.
7. எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் நாம் அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பது முக்கியம். செய்யும் செயலில் முழுக் கவனம் செலுத்திச் செய்ய முடியும் என்றால் மட்டுமே பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
8. எப்போதும் எல்லாம் சரியாகப் போகும் என்பதில்லை. அப்போது உணர்ச்சிவசப்பட்டு மனரீதியாகச் சோர்ந்து போவதால் எந்தப் பலனும் இல்லை. விரைவில் நேர்மறை சிந்தனைகளை மனதில் கொண்டு வருவது வாழ்க்கையை லேசாக்கும்.
9. எந்தக் கட்டத்தில் இருந்தாலும் உங்கள் முடிவுகளை, வழிகளை மாற்றிக் கொண்டு இன்னொரு வழியைத் தேர்வு செய்ய முடியும் என்கிற தைரியம் மனதில் இருக்க வேண்டும்.
10. வாழ்க்கையில் எதுவும் தானாக நடக்கவில்லை, எல்லாம் உங்கள் தேர்வின், முடிவின் விளைவுகள் என்கிற புரிதல் வேண்டும். உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் உங்கள் கையில் இருந்தால் மட்டுமே நீங்கள் நிறைவான வாழ்வை வாழ முடியும்.

“நீ சொல்றது சரிதான் நஸீ, என் மேலதான் தப்பு. நான் கொஞ்சம் பொறுப்பா இருந்திருந்தா, க்ளையண்ட் கிட்ட திட்டு வாங்கியும் இருக்க மாட்டேன். என்கூட வேலை செய்றவங்க மேல பழியும் போட்டிருக்க மாட்டேன்.”

“பொறுப்ப எடுத்துக்கிட்டதால இப்பவே நீ சி.இ.ஓ.தான் சச்சு” என்று நஸீ சொன்னதும் சச்சு நம்பிக்கையோடு வீட்டுக்குச் சென்றார்.

| சக்ஸஸ் ஃபார்முலா நீளும்... |

> முந்தைய அத்தியாயம்: சாதனையாளர்களிடம் இருக்கும் ஒரு மேஜிக்! | சக்ஸஸ் ஃபார்முலா - 3

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x