Published : 29 May 2024 06:05 AM
Last Updated : 29 May 2024 06:05 AM

டிங்குவிடம் கேளுங்கள்: வானவில்லுக்கு வண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?

வானவில்லுக்கு ஏழு நிறங்கள் எங்கிருந்து வருகின்றன? - ஆர். நிதின், 2-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர், கன்னியாகுமரி.

சூரிய ஒளியில் இருந்துதான் வண்ணங்கள் வருகின்றன, நிதின். வளிமண்டலத்தில் உள்ள நீர்த்துளிகள் வழியே சூரிய ஒளி ஊடுருவிச் செல்லும்போது, சிதறடிக்கப்படுகிறது. ஒளியில் உள்ள வண்ணங்கள் ஏழு நிறங்களாகப் பிரிந்து நம் கண்களுக்குக் காட்சியளிக்கின்றன.

இதைத்தான் நாம் வானவில் என்கிறோம். ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வோர் அலைநீளம் கொண்டது. ஊதா குறைந்த அலைநீளம் கொண்டதால், அதிகம் வளைந்து வானவில்லில் முதல் நிறமாகக் காட்சியளிக்கும். சிவப்பு அலைநீளம் அதிகம் கொண்டதால் குறைந்த வளைவோடு ஏழாவது நிறமாகக் காட்சியளிக்கும்.

பூனைகளுக்கு ஏன் நூல்கண்டு பிடிக்கிறது, டிங்கு? - உமா மகேஸ்வரி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

பூனைகள் ஒரு காலத்தில் காட்டு விலங்குகளாக இருந்தன. காட்டில் எதிரிகளால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்பதால், எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஏதாவது அசைந்தால் அது பாம்பாகவும் இருக்கலாம், சாதாரண ஓணானாகவும் இருக்கலாம் என்பதால் அந்த அசைவுகளைக் கவனித்து எச்சரிக்கையுடன் பூனைகள் செயல்பட வேண்டும். எலி, சிறு பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி உண்ண வேண்டும்.

இரையின் வேகத்தைக் கணித்து, பாய்ந்து சென்று, துல்லியமாகப் பிடிக்க வேண்டும். நீண்ட காலத்துக்கு முன்பே காட்டை விட்டு வந்து, மனிதர்களுடன் பூனைகள் வசித்து வந்தாலும் அவற்றின் சில பண்புகள் இன்றுவரை மாறவே இல்லை.

அதில் வேட்டையும் எச்சரிக்கை உணர்வும் அப்படியே இருக்கின்றன. பூனைகளுக்கு விளையாட்டிலும் ஆர்வம் உண்டு. விளையாடும்போது நூல்கண்டு இப்படியும் அப்படியும் ஓடுவதைப் பார்த்து இரையைத் துரத்துவதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்கிறது, உமா மகேஸ்வரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x