Last Updated : 27 May, 2024 06:00 AM

 

Published : 27 May 2024 06:00 AM
Last Updated : 27 May 2024 06:00 AM

வணிக சுழற்சி முதலீடும் வருமான வளர்ச்சிக்கான வாய்ப்பும்..

வணிக சுழற்சி முதலீடு என்பது பொருளாதார போக்கை அடையாளம் கண்டு அதனடிப்படையில் முதலீடு செய்யும் திட்டமிட்ட அணுகுமுறையாகும். இது, பொருளாதாரத்தின் பல்வேறுகட்டங்களை புரிந்து கொள்வதற்கும், மாற்றியமைப்பதற்கும் மற்றும் அதற்கேற்ப முதலீடு செய்வதற்கும் ஏற்றதாகும். அதாவது சிறப்பாக அல்லது குறைவாக செயல்படும் துறைகளின் நிகழ்தகவுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்வதற்கான கட்டமைப்பை அது வழங்குகிறது.

நாம் எந்த துறையில் இருந்தாலும் அவை பொருளாதார மாற்றங்களை சுற்றியே இயங்குகின்றன. பொதுவாக ஒரு வணிக சுழற்சி என்பது வளர்ச்சி, மந்தநிலை, சரிவு மற்றும் மீட்சி ஆகிய நான்கு கட்டங்களால் வரையறுக்கப்படுகிறது.

வணிக சுழற்சி முதலீட்டின் முதல் படி என்பது தற்போதைய பொருளாதாரம் எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அடையாளம் கண்டறிவதாகும். முழுத் திறனுடன் இயங்கும் தொழிற்சாலை, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு, விருப்பமான செலவினங்களின் அதிகரிப்பு ஆகியவை பொருளாதாரத்தின் வளர்ச்சி கட்டத்தை குறிக்கிறது.

இந்த கட்டத்தில் நிதியியல், பொழுதுபோக்கு, ஆட்டோமொபைல், உலோகம் ஆகிய துறைகளின் செயல்பாடு வலுவானதாக காணப்படும். மறுபுறம், மந்த நிலையின்போது மக்களின் அத்தியாவசிய தேவை காரணமாக தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள், மருந்துகள் ஆகிய துறைகள் செழித்து வளரும்.

மதிப்பு முதலீடு அல்லது சிறப்பு சூழ்நிலை முதலீடு உத்திகளில் இருந்து வேறுபட்டதுதான் வணிக சுழற்சி முதலீடு. மதிப்பீடுகளின் அடிப்படையில் தனிப்பட்ட பங்கை தேர்வு செய்வதைக் காட்டிலும், பேரியல் பொருளாதார குறியீடுகளில் கவனம் செலுத்தும் ஒரு மேல்-கீழ் மூலோபாய அணுகுமுறைதான் இது.

பொருளாதார நிலைகளின் அடிப்படையில் முதலீடுகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் சுழற்சி அடிப்படையிலான ஏற்ற இறக்கங்களுடன் இடர்களை நிர்வகிக்கும்போது அவர்கள் நீண்டகால வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், வணிக சுழற்சி முதலீட்டை செயல்படுத்துவது மிகவும் கடினமானது. பொருளாதார நிலைகளை சரியான நேரத்தில் கண்டறிய வேண்டும்.

தாமதமான செயல்பாடுகள் குறைவான செயல்திறனுக்கு வழிவகுக்கும் என்பதால் போர்ட்போலியோக்களை விரைவாக சரிசெய்வதில் சிரமம் உள்ளது. மேலும், இந்த மூலோபாயத்துக்கு பல்வேறு துறைகளின் செயல்பாட்டை முழுமையாக புரிந்து கொள்வது அவசியமாகிறது. எனவே, ஒரு சாதாரண நபர் இந்த மாற்றங்களை அறிந்து கொண்டு எளிதாக செயல்படுத்துவது கடினமான செயலாக பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக, தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் பரஸ்பர நிதி மூலம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது அறிவார்ந்த செயலாக அமையும். நாட்டில் தற்போது வணிக சுழற்சி கருப்பொருளாக் கொண்ட 10 நிதி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், ஐசிஐசிஐ புருடென்ஷியல் பிசினஸ் சைக்கிள் பண்ட் திட்டமும் அடக்கம். இது, 2021 ஜனவரி மாத தொடக்க காலத்திலிருந்து 25.6% (சிஏஜிஆர்) ஆண்டு சராசரி வருமானத்தை வழங்கி ஒரு நிலையான செயல்திறனைக் கொண்ட திட்டமாக விளங்குகிறது.

2024 ஏப்ரல் 29 நிலவரப்படி இந்த பண்ட் ஓராண்டு வருவாயாக 52.20%, இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளில் 27.35%, 26.29% என்ற அளவில் ஆரோக்கியமான வருவாயை தந்துள்ளது. இது, இந்த பண்டின் பெஞ்ச்மார்க்கான ஒரு வருடம், 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகளில் கிடைத்த வருமானம் முறையே 13.22%, 7.03% மற்றும் 6.33% சதவீதத்தை காட்டிலும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

- கணேசன் முரளிதரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x