Last Updated : 17 May, 2024 06:20 AM

 

Published : 17 May 2024 06:20 AM
Last Updated : 17 May 2024 06:20 AM

ஓடிடி உலகம்: எல்லை என்பது வெறும் கோடு

நகரமயமாக்கல் இன்னும் தீண்டியிராத உறைபனி சூழ்ந்த துருவ நிலப்பரப்புஅது. அங்கே துருவமான் வளர்ப்பைக் கால்நடைத் தொழிலாகச் செய்கிறது ஒரு சிறுபான்மை இனக் குழு. காவல்துறையோடு கைகோத்துக் கொண்டு அவர்கள் மீது அடக்கு முறையைப் பல விதங்களில் கட்டவிழ்த்து விடுகிறது ஆதிக்க இனக் குழு.

கால்நடைகளைத் தொடர்ந்து கொன்று கடத்துகிறது வேறொரு கும்பல். காட்டை அழித்து சுரங்கத் தொழிற்சாலை அமைக்க முயலும் அரசாங்கம். அந்த நிலப் பகுதியானது, மாறிவரும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தீவிரமாக எதிர்கொள்வது மற்றொரு சவால்.

கல்விதான் எல்லாவித ஒடுக்குமுறையிலிருந் தும் தங்களைக் காப்பாற்றும் என்று நம்பும் அந்த மக்கள், தங்கள் அன்றாட வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதைக்களம். இருளர், நேபாள ஷெர்ப்பாக்கள், ஆஸ்திரேலியாவின் பழங்குடி யினர், அமெரிக்காவின் செவ்விந்தியர்கள் என எந்தப் பழங்குடி இனக் குழுவுக்கும் இது பொருந்தும்.

எழுத்தாளர் ஆன் ஹெலனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஸ்டோலன்’ (2024) திரைப்படம், ஸ்வீடன் நாட்டின் பனி சூழ்ந்த பிரதேசங்களில் வாழும் ‘சமி’ என்கிற இனக் குழுவின் நெருக்கடியான வாழ்வைப் பேசுகிறது. எல்சா என்கிற பெண்ணின் வாழ்க்கை வழியாக மொத்த இனத்துக்குமான நெருக்கடியைப் பேசுகிறது.

ஒரு குறிப்பிட்ட காட்சியில் சுரங்கத் தொழிற்சாலை அமைப்பது பற்றி ஒரு விவாதம் நடக்கிறது. இது கிட்டத்தட்ட ‘வடசென்னை’ படத்தில் மீனவக் குடியிருப்பு ஒன்றைப் புறநகருக்குத் தூக்கிப் போட்டு இடம் மாற்றுவதற்காக விவாதிக்கும் காட்சிக்கு மிக அருகில் இருக்கிறது.

இன்னொரு காட்சியில் ‘கல்விதான் நமக்கு அதிகாரத்தைத் தரும் என்பதையும் அதிகாரம்தான் இது அத்தனைக்கும் தீர்வு’ என்று எல்சா கூறுவது, ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் பூ ராமு பேசும் ஒரு வசனத்தை நினைவூட்டுகிறது.

ஓர் ஐரோப்பிய மொழித் திரைப்படம், நமது நாட்டில் வாழும் எளிய பழங்குடி மக்களுக்கான இருத்தலியல் சிக்கல்களோடு நம்மைத் தொடர்புப் படுத்திக்கொண்டு பயணிக்க வைப்பது இப்படத்தின் சிறப்பு.

தவிர இது, எல்லா மரியா எய்ரா என்னும் பெண் இயக்குநரின் முதல் திரைப்படமும் கூட. கேளிக்கை என்பதைத் தாண்டி, ஓர் இனக்குழுவின் தற்கால நெருக்கடி மிக்க வரலாறு என்பது, அது வாழும் நிலப்பரப்பு, சமூக, பொருளாதார, அரசியல் என அனைத்தையும் நமக்கு நேர்மையாகவும் பிடிமானத்துடனும் கடத்துவதால் இது தேர்ந்த திரை அனுபவத்தைத் தருகிறது.

மொழி, இனம், எல்லைகள் கடந்து எல்லாப் படைப்புகளும் நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான். மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே அது.

- totokv@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x