Last Updated : 25 Aug, 2014 12:00 AM

 

Published : 25 Aug 2014 12:00 AM
Last Updated : 25 Aug 2014 12:00 AM

வினா விடை: சுற்றுச்சூழலோடு பொருந்திய லண்டன் இந்துக் கோயில்

குஜராத்’ஸ் சக்ஸஸ் ஸ்டோரி இன் வாட்டர் மேனேஜ்மெண்ட் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) நரேந்திர மோடி

ஆ) ஷங்கர் சிங் வகேலா

இ) அமித் ஷா

ஈ) இவர்களில் யாருமல்ல

விடை: ஈ) இவர்களில் யாருமல்ல.

குஜராத்’ஸ் சக்ஸஸ் ஸ்டோரி இன் வாட்டர் மேனேஜ்மெண்ட் என்னும் நூலை எழுதியவர் பா.ஜ.கவைச் சேர்ந்த ஸ்ரீராம் வேதிர். இவர் பாஜகவின் தேசிய நீர் மேலாண்மைப் பிரிவின் தலைவர். இந்நூலை ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷாவும் வெளியிட்டுள்ளார்கள். குஜராத் மாநிலத்தின் பொருளாதாரத்தில், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம், சாதனை ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

காஸா விவகாரம் காரணமாகப் பதவி விலகிய அமைச்சர் சயீதா வார்சி எந்த நாட்டின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்?

அ) இஸ்ரேல்

ஆ) அமெரிக்கா

இ) இங்கிலாந்து

ஈ) பாகிஸ்தான்

விடை: இ) இங்கிலாந்து. காஸா விவகாரத்தில் இங்கிலாந்தின் கொள்கையில் முரண்பாடு கொண்டு அதன் காரணமாக இங்கிலாந்தின் அமைச்சரவையிலிருந்து வெளியேறியுள்ளார். இங்கிலாந்தின் கொள்கை, தார்மிகரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்திருந்தார். பிரதமர் டேவிட் கேமரூன் அமைச்சரவையில் செயல்பட்ட ஒரே இஸ்லாமிய பெண் அமைச்சரான அவர் வெளியுறவுத் துறையில் அமைச்சர் பொறுப்பேற்றிருந்தார். இங்கிலாந்து அரசியல்வாதியான அவரது பூர்வீகம் பாகிஸ்தானாகும்.

உலகின் முதல் சுற்றுச்சூழல் இணக்க இந்துக் கோயில் எந்த நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) இங்கிலாந்து

ஈ) இவற்றில் எதுவுமல்ல

விடை: இ) இங்கிலாந்து.

வடமேற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்பெரி என்னுமிடத்தில் உலகின் முதல் சுற்றுச்சூழல் இணக்க இந்துக் கோயிலான சுவாமிநாராயண் மந்திர் ஆகஸ்ட் 19 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மேற்கூரையில் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வகையில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் மழை நீர் சேகரிப்பு முறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கட்டிடக் கலையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் பசுமைத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

துரோணாச்சாரியா விருதுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) அஜித்பால் சிங்

ஆ) ஹெ.பி.எஸ். அலுவாலியா

இ) ராகுல் டிராவிட்

ஈ) இவர்களில் யாருமல்ல

விடை: அ) அஜித்பால் சிங்

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கப்படுவது போல விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்படும் பயிற்சியாளர்களுக்கும் விருது வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் துரோணாச்சாரியா விருது 1985-ம் ஆண்டில் நிறுவப்பட்டது.

இந்த ஆண்டு, துரோணாச்சாரியா விருதுக் குழுவின் தலைவராக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் அஜித்பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 2013 –ம் ஆண்டு இதன் தலைவராக ஹெ.பி.எஸ். அலுவாலியா நியமிக்கப்பட்டிருந்தார். துரோணாச்சாரியாவின் வெண்கலச் சிலையும், ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசையும் உள்ளடங்கியது இந்த விருது.

இந்த விருதுக் குழுவில் 15 உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இதில் 12 விளையாட்டு வீரர்களும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது மேலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோரும் இடம்பெற்றிருப்பார்கள். உரிய பயிற்சியாளர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு விருது வழங்கலாம் என்பது குறித்து இந்தக் குழு விளையாட்டு துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கும். இறுதி முடிவை விளையாட்டுத் துறை அமைச்சர் மேற்கொள்வார். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 அன்று துரோணாச்சாரியா விருது வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x