Published : 08 May 2023 06:35 PM
Last Updated : 08 May 2023 06:35 PM

WTC இறுதிப் போட்டி | இந்திய அணியில் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!

இஷான் கிஷன்

மும்பை: எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் காயமடைந்த கே.எல்.ராகுலுக்கு மாற்றாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதனை அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரும் ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணியை வழிநடத்தி வந்த ராகுல், பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் காயமடைந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

இஷான் கிஷன்: 24 வயதான இஷான் கிஷன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். கடந்த 2021 முதல் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 49 முதல் தர கிரிக்கெட் போட்டி மற்றும் 91 லிஸ்ட் ஏ போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).

இடது தோள்பட்டை பகுதியில் காயமடைந்துள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருவதாகவும். அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதே போல கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் லேசான காயம் அடைந்துள்ளதாகவும். அவரை கொல்கத்தா அணியின் மருத்துவக் குழு கண்காணித்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், பிசிசிஐ மருத்துவக் குழுவினர் கொல்கத்தா மருத்துவக் குழுவினருடன் அவரது முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள தொடர்ந்து அவர்களுடன் பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

— BCCI (@BCCI) May 8, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x