Published : 03 May 2023 04:59 PM
Last Updated : 03 May 2023 04:59 PM

ஹர்திக் பாண்டியா ஆடியதன் பெயர் இன்னிங்ஸா..? - கடைசியில் பவுண்டரி அடிக்க முயலாததால் எழும் கேள்விகள்

இந்திய அணியின் சர்வதேச ஸ்டார்கள் ஆடும் சில ஐபிஎல் இன்னிங்ஸ்கள் நமக்கு புரியாத புதிராகவே அமைகின்றன. நேற்றைக்கு முந்தைய நாள் 127 ரன்களை எடுக்க முடியாமல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ஆர்சிபியிடம் தோற்றது. நேற்று தட்டிப் போட்டு தூக்க வேண்டிய டெல்லி அணியின் 130 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் கடந்த ஐபிஎல் சாம்பியனும் நடப்பு டேபிள் டாப்பர்ஸும் ஆன குஜராத் டைட்டன்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்கிறது. இத்தனைக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து கிரீசில் இருக்கின்றார். என்னதான் நடக்கின்றது?

இம்மாதிரி போட்டிகளின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பினாலோ, அனைத்தையும் உண்மை என நம்பி பார்க்கும் ரசிகர்களில் சிலர் நெகட்டிவ் விமர்சனம் என்று கோபமடைகின்றனர். ஐபிஎல் 1000 போட்டிகளுக்கும் மேல் சென்று விட்டதால் அதன் நம்பகத்தன்மையை உறுதியாக எடுத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. நம்பகத்தன்மை கொண்ட போட்டிகளுக்கு இடையே இத்தகைய நம்பகமற்ற போட்டிகளும் கலந்து ஊடாடி நிற்கின்றன என்பதுதான் நிதர்சனம்.

இப்படிப்பட்ட ஆட்டங்களினால் உண்மையில் சின்சியராக வீசிய முகமது ஷமி போன்றோரின் தீவிர முயற்சிகள் கேலிக்கூத்தாகி விடுகின்றன என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மேலும் கலீல் அகமட், இஷாந்த் சர்மா போன்றோரின் சீரிய முயற்சிகளும் வெற்றி பந்து வீச்சுகளும் போட்டியின் நம்பகத்தன்மையினால் வீணாகின்றன என்பதைப்பற்றியும் யாரும் கவலைப்படுவதில்லை. விருத்திமான் சஹா முதல் ஓவரிலேயே கலீல் அகமதிடம் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 2வது ஓவரே கிரீசுக்கு வந்து விட்டார்.

2-வது ஓவர் கிரீசுக்கு வந்த ஹர்திக் பாண்டிய போன்ற அதிரடி வீரர் 20 ஓவர் வரை நின்று, அதுவும் 130 ரன்கள் இலக்கை எட்ட முடியவில்லை என்பதை ஹர்திக் பாண்டியா பினிஷிங் செய்து ஜெயிக்க வைக்கும் திறமையுள்ளவர். ஆனால் ஐபிஎல் ஆட்டங்களின் போக்கே இப்படித்தான் என்பதால் விட்டு விட்டார் என்று கூறுவதா? அல்லது உண்மையில் நாம் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் திறமை மேல் சந்தேகம் கொள்வதா? உண்மையில் ஹர்திக் பாண்டியா திறமை மிக்கவர் என்றால் இதை ஜெயிக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இதற்கு அவரது திறமையின்மை காரணமல்ல என்றால் வேறு எங்கு தவறு நடக்கின்றது? என்ற கேள்விக்கு விடை கிடைப்பதில்லை.

இதைவிட சுப்மன் கில், இந்திய அணியின் 3 வடிவத்திற்கான வீரர், ‘எதிர்கால கோலி’ என்றெல்லாம் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுபவர். அவர் என்ன ஆடினார்? நார்ட்யே வீசிய பந்து ஒரு ஆஃப் வாலி பந்து. கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே ஆஃப் வாலி பந்தை பவுண்டரிக்கு அனுப்புவதுதான் முறை. அல்லது அடித்து நேராக பீல்டர் கைக்குச் சென்று ரன் இல்லாமல் போவது நடப்பதுண்டு. ஆனால் ஆஃப் வாலி பந்தை தூக்கி கவரில் கேட்ச் கொடுப்பது சர்வதேச கிரிக்கெட் ஆடும் வீரருக்கான ஷாட் போன்றதாக இல்லையே?

ஹர்திக் பாண்டியா வந்தவுடன் 3 பவுண்டரிகளுடன் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக் ரேட்டை 200% வைத்திருந்தார். 4வது பவுண்டரியையும் அடித்து 13 பந்துகளில் 18 ரன்கள் என்று நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தார். பவர் ப்ளேயில் 31/3. பவர் ப்ளே முடிந்தவுடன் அதிரடி வீரர் மில்லர் 3வது பந்தையே அதுவும் குல்தீப் யாதவ் பந்தை ஒதுங்கிக் கொண்டு ஃபைன் லெக் மேல் ஸ்கூப் ஆடப்போய் பவுல்டு ஆகிறார். இது என்ன ஸ்ட்ரோக். கில், அவுட் ஆனது, மில்லர் அவுட் ஆனது, விஜய் சங்கர் ஸ்லோயர் பந்தில் பவுல்டு ஆனது என்று அனைத்தையுமே நம்ப முடியாமல்தான் பார்க்க வேண்டியுள்ளது.

6வது ஓவரில் 4வது பவுண்டரியை அடித்த ஹர்திக் பாண்டியா, படிப்படியாக மந்தமாகி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 14-வது ஓவரில் தனது அடுத்த பவுண்டரியை அடிக்கின்றார். கிட்டத்தட்ட அதிரடி ஆல்ரவுண்டருக்கு டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுண்டரி அடிக்க 8 ஓவர்கள் இடைவெளி ஏற்பட்டுள்ளது. 15, 16-வது ஓவர்களில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் ஹர்திக். திவேத்தியா இறங்கி 12 பந்துகளில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்புயல் நார்ட்யேவை 3 சிக்சர்களை அடுத்தடுத்து விளாசுகிறார். அந்த ஓவரில் 21 ரன்கள் வர கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை.

20வது ஓவரை இஷாந்த் சர்மா வீச, அவரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீசுகிறார் கடும் பிரஷரில் வீசுகிறார். ஆனால் அவர் வீசிய முழங்கால் உயர புல்டாஸைக் கூட ஹர்திக் பாண்டியாவினால் பவுண்டரிக்கு அடிக்க முடியவில்லை. 2 ரன்கள்தான் வருகின்றது. திவேத்தியா கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா ஒரு முனையில் 53 பந்துகளில் 59 என்று தேங்கி நிற்கிறார். தோல்வி கேப்டனாக சோர்ந்து நிற்கிறார். 6 பந்துகளில் 12 என்று தொடங்கி விட்டு, அடுத்த 47 பந்துகளில் வெறும் 47 ரன்களைத்தான் அடிக்க முடிகின்றது என்றால் இது என்ன இன்னிங்ஸில் சேரும்? - இதுவே நம் கேள்வி.

ஆட்டம் முடிந்தவுடன் பேட்டியில் தன் மீது முழு பழியையும் போட்டுக்கொண்டு தோல்விக்கான பொறுப்பை பாண்டியா ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் நம் கேள்வி என்னவெனில் திவேத்தியா நார்ட்யேவை 3 சிக்சர்கள் அடிக்க முடியும் போது தான் எதிர்கொண்ட கடைசி 14 பந்துகளில் பாண்டியா ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் சோம்பியது ஏன்? அடிக்க முயற்சி கூட செய்யாதது ஏன்? அப்படிப்பார்த்தால் இந்திய அணிக்குள் வரத் தகுதி படைத்தவர் திவேத்தியாதானே தவிர ஹர்திக் பாண்டியா அல்ல, ஆனால் இவர் இந்திய அணியின் கேப்டன், திவேத்தியா வெளியே இருந்து கொண்டிருக்கிறார். இது என்ன போக்கு? ஐபிஎல் கிரிக்கெட்டை சீரியஸாகப் பார்க்கும், நம்பிப் பார்க்கும் பண்டிதர்களோ, சாமானியர்களோ இந்தக் கேள்விக்கு விடை அளிப்பார்களா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x