Published : 26 Apr 2023 12:22 AM
Last Updated : 26 Apr 2023 12:22 AM

’சானியாவை மிகவும் மிஸ் செய்கிறேன்’ - விவாகரத்து வதந்திகளுக்கு சோயப் மாலிக் முற்றுப்புள்ளி

கராச்சி: தனது மனைவி சானியா குறித்து கூறி விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சோயப் மாலிக்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். என்றாலும் இருவரும் தங்கள் நாட்டை தொடர்ந்து தங்கள் விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார் சானியா.

இதனிடையே, சானியாவும் சோயப் மாலிக்கும் தற்போது பிரிந்து வாழ்ந்துவருவதாக சொல்லப்படுகிறது. டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சோயப் அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சானியா மிர்சாவுக்கு துரோகம் செய்துவருவதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அதற்கேற்றாற்போல் இருவரது சமீபத்திய நடவடிக்கைகளும் அமைந்தன. 'உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன. அல்லாவைக் காண' என்று சில மாதங்கள் முன் உருது மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் சானியா. அதுமட்டுமில்லாமல், சோயப் மாலிக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்ட சானியா, அதன்பின் தனது மகன் உடன் இருக்கும் புகைப்படங்களையும் மட்டுமே பதிவிட்டு சோயப்பை தவிர்த்து வந்தார்.

அதேபோல், சானியா மிர்சா பாகிஸ்தானில் டென்னிஸ் அகாடமி தொடங்குவது குறித்து சோயப் மாலிக்கிடம் கேள்வி கேட்டபோது தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று பதில் கூறியதையும், ரம்ஜான் பண்டிகையை இருவரும் சேர்ந்து கொண்டாடததையும் வைத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சோயப் மாலிக் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி அமைந்துள்ளது. "ரம்ஜான் பண்டிகையை எனது மனைவி சானியா மிர்சாவுடன் கொண்டாடவே விரும்பினேன். ஆனால், இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவதால் அதுதொடர்பான பணிகளில் சானியா மிர்சா ஈடுபட்டுள்ளார் என்பதால் எங்களால் ரம்ஜானை ஒன்றாக கொண்டாட முடியாமல் போய்விட்டது. எனினும், நாங்கள் இருவரும் எப்போதும் அன்பாகவே இருக்கிறோம். சானியாவை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று தனது மனைவி சானியா குறித்து கூறி விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சோயப் மாலிக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x