

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்காக மேத்யூ ஷார்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஷார்ட், 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பத்து ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். அங்கிருந்து 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஹர்ப்ரீத் சிங் பாட்டியா மற்றும் கேப்டன் சாம் கர்ரன். 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் ஹர்ப்ரீத். 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த சாம் கர்ரனும் 19-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து மிரட்டினார் ஜிதேஷ் சர்மா. ஹர்ப்ரீத் ப்ரார் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாசினார். 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.
அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரன்டோர்ஃப், கேமரூன் கிரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர் என மும்பை அணியின் நான்கு பவுலர்கள் தலா 40 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தனர். இதில் அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரன்டோர்ஃப் என இருவரும் 3 ஓவர்கள் மட்டுமே வீசி இருந்தனர். 16-வது ஓவரில் 31 ரன்களை கொடுத்திருந்தார் அர்ஜுன் டெண்டுல்கர். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை விரட்டுகிறது.