Published : 27 Mar 2023 05:53 AM
Last Updated : 27 Mar 2023 05:53 AM

மகளிர் குத்துச்சண்டை | நிகத் ஜரீன் 2-வது முறையாக உலக சாம்பியன் - தங்கம் வென்றார் லோவ்லினா

லோவ்லினா

புதுடெல்லி: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை நிகத் ஜரீன் 2-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயின் தங்கம் வென்று அசத்தினார்.

13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது.

இந்த இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீனும், வியட்நாம் வீராங்கனை நுகுயென் தி தாமும் மோதினர்.

இதில் சிறப்பாக விளையாடிய நிகத் ஜரீன், பல குத்துகளை வியட்நாம் வீராங்கனை முகத்தில் விட்டு புள்ளிகளை குவித்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் நிகத் ஜரீன் வெற்றி பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

இதன்மூலம் உலகக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோமுக்குப் பிறகு 2 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் ஜரீன். மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற 75 கிலோ பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெயினும், ஆஸ்திரேலிய வீராங்கனை கேயிட்லின் பார்க்கரும் மோதினர்.

இதில் லோவ்லினா 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கரை வீழ்த்தி தங்கத்தை வென்று அசத்தினார்.

நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் நீது கங்காஸ் (48 கிலோ பிரிவு), சவீட்டி பூரா (81 கிலோ) தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களை அள்ளியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x