Published : 04 Mar 2023 05:45 AM
Last Updated : 04 Mar 2023 05:45 AM

இந்தூர் போட்டியில் எளிதான வெற்றி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. தகுதி

டிராவிஸ் ஹெட்

இந்தூர்: இந்தியாவுக்கு 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும், ஆஸ்திரேலியா 197 ரன்களும் எடுத்தன. 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது நேதன் லயனின் அபாரமான சுழற்பந்து வீச்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சேதேஷ்வர் புஜாரா 59, ஸ்ரேயஸ் ஐயர் 26 ரன்கள் சேர்த்தனர். நேதன் லயன் 8 விக்கெட்கள் வீழ்த்தினார்.

76 ரன்கள் இலக்குடன் நேற்றைய 3-வதுநாள் ஆட்டத்தில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் 53 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 58 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சேர்த்தனர். முன்னதாக உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது வரும்ஜூன் 7 முதல் 11 வரை லண்டன் தி ஓவல்மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது.

இந்திய மண்ணில் 6 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.அதேவேளையில் கடந்த பத்தாண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெற்ற 15 தொடர்களை வென்றுள்ள இந்திய அணி 3-வதுதோல்வியை சந்தித்துள்ளது. 4 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியஅணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.கடைசி டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

6-வது முறை…: சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 3 நாட்களுக்குள் இந்திய அணி தோல்வியை சந்திப்பது இது 6-வது முறையாகும். இதற்கு முன்னர் புனேவில் 2016-17-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2007-08-ல் அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், 2000-01-ல்மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 1999-2000-ல் மும்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், 1951-52-ல் கான்பூரில் இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்திய அணி 3 நாட்களுக்குள் தோல்வியை சந்தித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x