Published : 27 Feb 2023 08:45 PM
Last Updated : 27 Feb 2023 08:45 PM

“இந்தியாவுக்கு சாதகமான பிட்ச்கள்தான்... ஆஸி. வசம் ஆட்ட நுட்பம் இல்லை” - மார்க் டெய்லர் கருத்து

மார்க் டெய்லர் | கோப்புப்படம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மார்ச் 1-ம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் பிட்ச் இந்தியாவுக்குச் சாதமாக இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், ஆஸ்திரேலியா இவ்வளவு மோசமாக ஆடும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பேட்டர்கள் சுழலும் பந்துகளைச் சமாளிக்க பெரும்பாலும் தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். ஆஸ்திரேலிய பேட்டர்களிடமிருந்து அவ்வப்போது நல்ல செயல்திறன் இருந்தபோதிலும், இந்திய பேட்டர்களுக்கு அந்த அணியின் பவுலர்கள் வீசுவது இந்திய அணியை மடக்குவதற்கு எதுவுமே போதுமானதாக இல்லை.

குறிப்பாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் நாக்பூர், டெல்லி டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்ச் உள்ளிட்ட நிலைமைகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும், பேட்டர்களுக்கு எதிராகவும் இருந்ததோடு, இந்திய பேட்டர்களுக்குச் சாதகமாக தாழ்வான பவுன்ஸ், மெதுவான பிட்ச் என்று போடப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியர்கள் ஸ்பின்னிடம் மட்டும் விக்கெட்டுகளைக் கொடுக்கவில்லை அவர்களால் ஷமியையும், சிராஜையும் கூட ஆட முடியவில்லை என்பதைத்தான் நாம் கண்டோம்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறுகையில், இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள், பேட்டராக இருந்தாலும் சரி, பந்து வீச்சாளர்களாக இருந்தாலும் சரி, சொந்த நாட்டு வீரர்களுக்கு ஏற்றது என்றும். முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் ஆக்ரோஷமாக விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய பேட்டர்களிடத்தில் நுட்பம் போதவில்லை என்றும் கூறியுள்ளார்.

“ஆம்! ஆஸ்திரேலிய நிலைமைகளும் இந்திய நிலைமைகளும் முற்றிலும் வேறு. என்னதான் இங்கு வந்து ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலியர்கள் ஆடினாலும் இங்குள்ள பிட்ச்க்ள் தனித்தன்மை வாய்ந்தவை. கணுக்கால்களுக்கு கீழ் வரும் தாழ்வான பந்துகள், அஸ்வின் ஜடேஜாவுக்குப் பொருத்தமானது என்பதோடு இந்திய பேட்டர்களுக்கும் பொருத்தமானது.

இது போன்ற பிட்ச்களில் ஆடி எங்களுக்குப் பழக்கமில்லை. நாங்கள் ஆக்ரோஷ மனநிலையுடன் தான் வருகின்றோம். வருவது வரட்டும் பந்து வீச்சை அடித்துப் பார்த்து விடுவோம் என்றுதான் வருவோம். அது ஒரு நல்ல மனநிலைதான். ஆனால், வெறும் மனநிலை மட்டும் போதாது. அதற்கான ஆட்ட நுட்பங்கள் தேவை. டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷமான முயற்சி இருந்தது. ஆனால், செயல்படுத்தலில் கோட்டை விட்டோம்.

நானும் இங்கு அதிகமாக ஆடியதில்லை. 1998-ல் சென்னையில் ஒரு நல்ல மேட்சில் நெருக்கமான மேட்சில் தோற்றோம். ஆனால், 2வது டெஸ்ட் போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்னிங்ஸ் மற்றும் 220 ரன்களில் தோற்றோம். இது செம்ம அடி. இப்படி ஆஸ்திரேலியா எங்கும் தோற்காது. இது வேடிக்கையல்ல. ஆனால், பெங்களூரில் சமதளமான பிட்சில் ஆடி ஜெயித்தோம். திருப்பி அடிக்கலாம்தான். ஆனால், இப்போதுள்ள இந்திய பிட்ச்களில் கடினம். முன்பு இருப்பது போன்ற பிட்ச் அல்ல இவை” என்றார் மார்க் டெய்லர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x