Published : 21 Jan 2023 07:08 AM
Last Updated : 21 Jan 2023 07:08 AM
ராய்பூர்: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேசகிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்தியஅணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் ஷுப்மன் கில் இரட்டை சதம்விளாசி அசத்தியிருந்தார். அவரிடம்இருந்து மேலும் ஒரு அபாரமான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
ஹைதராபாத் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு மோசமாக அமைந்தது. மொகமது சிராஜ் மட்டுமே கட்டுக்கோப்பாக வீசி குறைந்த ரன்களை வழங்கினார்.
350 ரன்கள் இலக்கை விரட்டியநியூஸிலாந்து 131 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையிலும் அந்த அணி மேற்கொண்டு 206 ரன்களை விளாச இந்திய அணியின் மற்ற பந்து வீச்சாளர்கள் அனுமதித்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. ஷர்துல்தாக்குருக்கு பதிலாக உம்ரன் மாலிக்கும், வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக யுவேந்திர சாஹலும் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
நியூஸிலாந்து அணியை பொறுத்தவரையில் முதல் ஆட்டத்தில் இலக்கை துரத்திய போது இந்திய அணிக்கு கடும் சவால் அளித்தது. மைக்கேல் பிரேஸ்வெல் தனது அசாத்தியமான அதிரடியால் இந்திய அணியின் பந்து வீச்சை அழுத்தத்திலேயே வைத்திருந்தார்.
78 பந்துகளில் 140 ரன்கள் வேட்டையாடி இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் ஒரு முறை இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடிதரக்கூடும். கேன் வில்லியம்சன் இல்லாததால் டாப் ஆர்டரில்யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் களத்தில் வேரூன்றி விளையாட வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த விஷயத்தில் நியூஸிலாந்து அணி கவனம் செலுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் ஒருநாள் போட்டித் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் நியூஸிலாந்து அணி தனது வியூகங்ளை மாற்றி அமைப்பதில் முனைப்பு காட்டக்கூடும்.
ராய்பூரில் முதல் சர்வதேச போட்டி...: இந்தியா – நியூஸிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. சுமார் 60,000 பேர் அமரக்கூடிய இந்த மைதானம் கடந்த 2008-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறை. இதன் மூலம் இந்தியாவில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடத்தும் 50-வது மைதானம் என்ற பெருமையை ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment