Published : 15 Dec 2022 11:41 AM
Last Updated : 15 Dec 2022 11:41 AM

IND vs BAN முதல் டெஸ்ட் | விராட் கோலி அந்தப் பந்தை ஏன் அப்படி ஆடினார்?

விராட் கோலி | கோப்புப்படம்

சட்டோகிராம்: வங்கதேசத்தின் சட்டோகிராமில் நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் புஜாரா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் சரிவிலிருந்து அணி மீண்டது. ரோகித் சர்மா இல்லாத நிலையில் பெரிய அளவில் நம்பப்பட்ட விராட் கோலி நேற்று ஏமாற்றம் கொடுத்தார்.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது, முதல் நாள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த சட்டோகிராம் ஆடுகளத்தில் பந்துகள் மிகவும் தாழ்வாக சில வேளைகளில் கணுக்காலுக்குக் கீழும் சென்றதால் பேட்டிங் கடினமானது. இதில் புஜாரா, ஷ்ரேயஸ் ஐயர் வழக்கமான டெஸ்ட் பாணியில் பொறுப்புடனும், கவனத்துடனும் ஆட ரிஷப் பந்த் வழக்கம் போல தன் அதிரடி முறையை கையாண்டார். ஆனால் அவர் பவுல்டு ஆன பந்து கணுக்காலுக்குக் கீழே சென்றது.

சுப்மன் கில், 20 ரன்கள் எடுத்தவுடனேயே போதும் என்று தோன்றி விட்டது போலும். டி20 ஷாட் போல் தைஜுல் வீசிய இடது கை ஸ்பின் பந்தை ஸ்வீப் ஆட முயன்றார். பந்து நின்று வந்தது என்பதோடு அவர் மட்டைக்கு வரும்போது ஸ்பீட் இல்லாமல் நொந்து போய் வந்தது. அதற்கு அந்த ஷாட் ஆடியிருக்கக் கூடாது. அதனால் விக்கெட் கீப்பருக்கு அருகில் ஷார்ட் பைன் லெக்கில் சுலபமான கேட்சுக்கு வெளியேறினார் கில்.

கேப்டன் கே.எல்.ராகுல் (22) திண்டாட்டமாக ஆடினார். அவர் கலீத் அகமத் வீசிய தரையோடு தரையாக எழும்பாமல் வந்த பந்துக்கு ஸ்டம்பை கவர் செய்து ஆடியிருக்க வேண்டும். ஆனால் தவறாக பந்து வந்த லைனுக்கு வெளியே ஆடினார். இதனால் மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது.

விராட் கோலி 5 பந்துகளே ஆடினார். அதில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் இடது கை ஸ்பின்னர் தைஜுல் ஒரு பந்தை ‘ரவுண்ட் த விக்கெட்டில்’ ரவுண்ட் ஆர்ம் ஆக்‌ஷனில் லெக் ஸ்டம்பில் பிட்ச் செய்து போதிய அளவுக்கு திருப்பினார். பெரிய அளவில் பந்து திரும்பவில்லை. கோலியின் மட்டையைக் கடந்து செல்லும் அளவுக்கு பந்து திரும்பியது. மிடில் ஸ்டம்புக்கு நேராக பின் காலில் எல்.பி வாங்கினார் கோலி. அதை அவர் ரிவியூ செய்திருக்கக் கூடாது. ஆனாலும் செய்தார். அது எல்.பி என்பது உறுதியானது. வேறு வழியில்லாமல் வெளியேற வேண்டி இருந்தது. ரிவியூவும் போய் விட்டது.

கோலி பின் காலில் சென்று தேங்கி விட்டார். அதோடு லெக் திசையில் பந்தை லேசாக தள்ளி விட முயன்றதும் தவறான முடிவாகும். ஒன்று சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னுக்கு நிற்பாரே அது போல் லெக் ஸ்டம்புக்கு சற்று வெளியே நின்று பந்தை கோலி எதிர்கொண்டிருந்தால் அவர் பின் காலுக்கு சென்ற பந்தை தடுத்தாடியிருப்பார்.

இல்லையெனில் முன் காலில் வந்து ஆடியிருந்தால் பிரச்சினையே இல்லை. தடுத்தாடியிருக்கலாம். இரண்டும் கெட்டானாக பின் காலில் சென்று தேங்கியதோடு பந்தை லெக் திசையில் தள்ளி விட முயன்றதால் திரும்பிய பந்து கால்காப்பை ஸ்டம்பிற்கு நேராகத் தாக்கியது. வர்ணனையில் இருந்த பிராட் ஹாகும் கோலி முன்னால் வந்து ஆடியிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். கோலி இதே போல் லெக் ஸ்பின்னர்களிடமும் பவுல்டு ஆகும் பழக்கத்தைக் கொண்டிருப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

சச்சின் டெண்டுல்கரின் புத்தகத்திலிருந்து ஒரு இழையை கோலி உருவிக் கொண்டால் போதும் அதன் பிறகு கோலியை சூழற்பந்தாலும் அசைக்க முடியாது.

2020 முதல் விராட் கோலி 19 டெஸ்ட்களில் 33 இன்னிங்ஸ்களில் 873 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதுவும் அவரது பேட்டிங் சராசரி 26.45 என குறைந்தது குறிப்பிடத்தக்கது. 79 ரன்கள்தான் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர். 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். பிட்ச் மோசம்தான். ஆனால் இதைவிட குழிப்பிட்ச்களில் இந்தியாவில் ஆடிப் பழகியவர்தானே கோலி. எனவே தைஜுல் போன்ற பவுலரிடம் மலிவாக ஆட்டமிழந்திருக்கக் கூடாது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x