Published : 14 Dec 2022 01:48 PM
Last Updated : 14 Dec 2022 01:48 PM

ஓய்வை உறுதி செய்தார் மெஸ்ஸி: டிச.18 இறுதிப் போட்டியே கடைசி என அறிவிப்பு

லியோனல் மெஸ்ஸி

கத்தார்: கால்பந்து ஜாம்பவானும் அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி தனது ஓய்வை உறுதி செய்துள்ளார். நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி டிசம்பர் 18-ல் நடைபெறுகிறது. அதுவே தனது கடைசிப் போட்டி என மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

வரும் 18-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, குரோஷியுடன் நடந்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார் மெஸ்ஸி. நடப்புத் தொடரில் மெஸ்ஸியின் அந்த பெனால்டி கோல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தனது ஓய்வை அறிவித்துள்ள மெஸ்ஸி, "எனது கடைசி ஆட்டத்தை இறுதிப் போட்டியில் விளையாடி எனது உலகக் கோப்பை பயணத்தை முடிக்க முடிந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். அடுத்த கால்பந்து போட்டிக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் உள்ளன. அதில் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. அதனால் இந்தப் போட்டியில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முடிக்க நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

35 வயதான லியோனல் மெஸ்ஸி விளையாடுவது இது 5-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி. டியோகோ மாரடோனா, ஜேவியர் மாஸ்செரானோ ஆகியோர் தலா 4 உலகக் கோப்பைகளை சந்தித்துள்ள நிலையில், இப்போதைக்கு மெஸ்ஸிதான் அதிக உலகக் கோப்பைகளை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் விளையாடுவது இது 6-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2018 சாம்பியன் பிரான்ஸ் (குரூப் D) அல்லது குரூப் F-ல் இருந்து மொராக்கோவை சந்திக்கும். மொராக்கோ அணி மீதும் நடப்பு தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x