Published : 05 Dec 2022 01:14 PM
Last Updated : 05 Dec 2022 01:14 PM
தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. குரூப் சுற்று ஆட்டங்களில் பிரேசில் அணி செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்தியிருந்தது. ஆனால் அதே நேரத்தில் கேமரூனிடம் தோல்வி கண்டிருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்நெய்மர் காயமடைந்து ஓய்வில் உள்ளார். அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் தென் கொரிய அணி லீக் ஆட்டங்களில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை வீழ்த்தியிருந்தது. இதுவரை, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. 2002-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் தென் கொரியா அணி அரை இறுதி வரை முன்னேறியிருந்தது. இரு அணிகளும் இதுவரை 7 முறை சந்தித்துள்ளன. ஆனால் உலகக் கோப்பையில் இதுவரை இரு அணிகளும் மோதிக் கொண்டதில்லை. இந்த 7 ஆட்டங்களில் பிரேசில் 6 முறையும், தென் கொரியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால் பலம் வாய்ந்த பிரேசிலை, நாக்-அவுட் சுற்றில் தென் கொரியா வீழ்த்துவது கடினம் என்று விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானை சந்திக்கும் குரோஷியா: மற்றொரு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று ஜப்பான் - குரோஷியா அணிகள் மோதவுள்ளன. அல் வக்ராவில் உள்ள அல் ஜனூப்மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் ஜப்பான் ஒரு முறையும், குரோஷியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது.
குரூப் இ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை ஜப்பான் பெற்றது. கத்தார்உலகக் கோப்பையில் குரூப் எப் பிரிவில் 5 புள்ளிகளுடன் 2-ம் இடத்தை குரோஷியா பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இரு அணி வீரர்களும் தீவிர முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment