Published : 16 Nov 2022 09:23 PM
Last Updated : 16 Nov 2022 09:23 PM

'மூன்றே நாளில் அடுத்த தொடரா?' - மொயின் அலி குற்றச்சாட்டு | 'ஐபிஎல் என்றால்...' - மைக்கேல் கிளார்க் பதிலடி

கிளார்க் மற்றும் மொயின் அலி | கோப்புப்படம்

அடிலெய்ட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியான கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஐபிஎல் தொடரை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடும் இந்த தொடர் நாளை தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஞாயிறு அன்று டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தது இங்கிலாந்து அணி. மிகவும் குறுகிய நாட்கள் இடைவெளியில் (72 மணி நேரத்தில்) அடுத்த தொடரில் அந்த அணி விளையாடுகிறது.

“வெறும் மூன்று நாட்கள் கால இடைவெளியில் விளையாடுவது என்பது மிகவும் மோசமான அனுபவம். நல்ல வேளை கடந்த ஞாயிறு அன்று மழை பொழிவு இல்லை. அப்படி இருந்திருந்தால் இரண்டு நாட்கள் தான் இடைவெளி இருந்திருக்கும். வீரர்களாக நாங்கள் இதற்கு பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம். ஆனால் இப்படி இரண்டு அல்லது மூன்று நாட்களில் அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடும் போது அனைத்து நேரங்களிலும் நாங்கள் 100 சதவீத திறனை வெளிப்படுத்துவது கடினமானது.

இப்படி நடப்பது தொடர் கதையாகி உள்ளது. 2019 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகும் இது நடந்தது. ஒரு குழுவாக அந்த வெற்றியை நாங்கள் கொண்டாட வேண்டும். உலகக் கோப்பை தொடர், அதற்கு முன்கூட்டியே தயாராவது என ஏராளமான பணிகள் அதன் பின்னால் உள்ளது” என மொயின் அலி தெரிவித்துள்ளார்.

“டி20 உலகக் கோப்பை விளையாடி முடித்த அடுத்த நாளே ஐபிஎல் தொடரில் பங்கேற்க விமானம் ஏறும் சூழல் இருந்தால் யாரும் இப்படி சிணுங்க மாட்டார்கள் என நான் கருதுகிறேன். பணத்திற்காக ஃப்ரான்சைஸ் தொடர்களில் விளையாடும் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை ஒரு போதும் குறை கூற முடியாது. உங்களுக்கு கிடைக்கும் ஆறு முதல் எட்டு வார கால விடுமுறையை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் மலர் போல புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்” என மைக்கேல் கிளார்க் சொல்லியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மொயின் அலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணி வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் அட்டவணை குறித்து இப்படி சொல்வது முதல்முறை அல்ல. கடந்த காலங்களிலும் கேப்டன் பட்லர், டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போன்றவர்கள் பேசி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon