மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

மார்க் பவுச்சர்.
மார்க் பவுச்சர்.
Updated on
1 min read

மும்பை: எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உறுதி செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டுக்கு நடுவே உலகம் முழுவதும் நடைபெறும் லீக் கிரிக்கெட் தொடர்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. அதில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. மொத்தம் 10 அணிகள் கடந்த சீசனில் பங்கேற்று விளையாடி இருந்தன. அடுத்த ஆண்டும் 10 அணிகள் விளையாட உள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் அரங்கில் அதிக முறை (5) பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அறியப்படுகிறது. அந்த அணியில் ஆட்டத்தை வென்று கொடுக்கும் வல்லமை கொண்ட வீரர்கள் அதிகம் இடம்பிடித்திருப்பதே அதற்கு காரணம். அது தவிர அந்த அணியின் பயிற்சியாளர் அமைப்பும் உலகத் தரத்தில் இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் மட்டுமல்லாது, தென்னாப்பிரிக்க டி20 தொடர் மற்றும் அமீரக டி20 தொடர்களிலும் தனித்தனி அணியை களம் இறக்க உள்ளது.

அதற்கு உகந்த வகையில் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்த ஜெயவர்த்தனே மற்றும் இயக்குநராக இயங்கி வந்த ஜாகீர் கானுக்கு உயர் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் ஐபிஎல், தென்னாப்பிரிக்க டி20 மற்றும் அமீரக டி20 அணிகளை கவனித்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது. அதன் காரணமாக கிரிக்கெட் களத்தில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

“மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நான் நியமிக்கப்பட்டதை கவுரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் பார்க்கிறேன்” என பவுச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in