Published : 19 Apr 2022 01:14 PM
Last Updated : 19 Apr 2022 01:14 PM

இ-ஸ்போர்ட்ஸ் | இந்தியாவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்; 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: சுமார் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வரும் தேசிய இ-ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோட்டா 2, ஹெர்த்ஸ்டோன், ஃபிஃபா 22, ஸ்ட்ரீட் ஃபைட்டர் V மற்றும் லீக் ஆஃப் லெஜெண்ட்ஸ் என ஐந்து பிரிவுகளில் தேசிய இ-ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. நேற்று (ஏப்ரல் 18) தொடங்கி வரும் ஞாயிறு (ஏப்ரல் 24) வரையில் இந்த போட்டி நடைபெறுகிறது. ஆண், பெண் என 200க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்த போட்டி ஆன்லைனில் நடைபெறுகிறது.

இதில் இந்தியாவில் உள்ள சிறந்த இ-ஸ்போர்ட்ஸ் வீரர்கள் பங்கேற்று, தங்கள் திறனை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார் இந்திய இ-ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பின் தலைவர் வினோத் திவாரி.

"நாட்டுக்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கிடைக்கப்பெறும் என்ற காரணத்தால் வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் உலக அளவில் விளையாடி வரும் வீரர்களுக்கு கடுமையான போட்டியாளராக சவால் கொடுப்பார்கள். அவர்களது அபார திறன் மூலம் நாட்டின் இ-ஸ்போர்ட்ஸ் புதிய உயரத்தை எட்டும் என நம்புகிறேன். இதில் பங்கேற்று விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார் வினோத்.

தனிநபர் மற்றும் குழு என்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஜீத் ராஜேஷ் குந்த்ரா, மொயின் இஜாஸ், சமர்த் திரிவேதி, தீர்த் மேத்தா, ஆதித்ய வர்மா என இந்தியாவின் முன்னணி இ-ஸ்போர்ட்ஸ் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளதாக தகவல். இதில் தீர்த் மேத்தா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற இ-ஸ்போர்ட்ஸ் டெமோ நிகழ்வில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பித்தக்கது.

சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இ-ஸ்போர்ட்ஸ் பிரிவில் மொத்தம் எட்டு ஈவென்ட்டுகள் நடைபெற உள்ளது. அதன் மூலம் வீரர்களுக்கு மொத்தம் 24 பதக்கங்கள் கிடைக்கவுள்ளது.

இருந்தாலும் அரேனா ஆப் வேலர் மற்றும் பப்ஜி மொபைல் மாதிரியான இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல ட்ரீம் த்ரீ கிங்டம்ஸ் 2 விளையாட்டும் இந்தியாவில் இல்லை. அதனால் இந்த மூன்றிலும் இந்திய வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x