Published : 24 Mar 2022 03:06 PM
Last Updated : 24 Mar 2022 03:06 PM
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜா ஏற்கவுள்ளார். ஐபிஎல் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்பட்ட வந்த நிலையில், தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க முடிவெடுத்ததுடன், அவரே ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளார். 2012 முதல் சென்னை அணியின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வரும் ஜடேஜா, சென்னை அணியை வழிநடத்தும் மூன்றாவது வீரராக இருப்பார். அதேநேரம் இந்த சீசனிலும் அதற்கு பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணியை முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. முன்னதாக, சில மணிநேரங்கள் முன்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தோனி கேப்டனிஷிப்பில் இருந்து விலக இருப்பது பற்றி பேசியிருந்தார்.
அதில், "இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தோனி ஒருசில ஆட்டங்களில் மட்டுமே விளையாட முடிவு செய்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜா ஏற்கத் தயாராக இருப்பார்.
கடந்த சில ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா ஒரு வீரராக முதிர்ச்சியடைந்த விதம் மற்றும் சூழ்நிலைகளை சமாளிக்கும் விதம் அருமையாக மேம்பட்டுள்ளது. எனவே, தோனி ஓய்வு எடுக்க முடிவு செய்து, கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்று தெரிவித்தார். அதன்படி, அவர் பேசிய சில மணிநேரங்களில் கேப்டன் மாற்றப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment