Published : 25 Feb 2022 03:48 PM
Last Updated : 25 Feb 2022 03:48 PM
மும்பை: ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ நடத்திய ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்த முடிவெடுக்கப்பட்ட நிலையில், அதன்படி, மார்ச் 27ம் தேதி தொடரை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் தொடரை ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ள ஸ்டார் நெட்வொர்க், 26ம் தேதிக்குப் பதிலாக ஒருநாள் முன்னதாக, 26ம் தேதி சனிக்கிழமை தொடரை தொடங்க கோரிக்கை விடுத்தது. நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
மார்ச் 26ம் தேதி தொடங்கும் தொடர் முழுவதுமாக மகாராஷ்ட்ரா மாநிலத்திலேயே நடத்தப்படவுள்ளன. மும்பை, நவி மும்பை, புனே பகுதிகளில் உள்ள நான்கு மைதானங்கள் இதற்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. வான்கடே மைதானத்தில் 20, பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 15, DY பாட்டீல் ஸ்டேடியத்தில் 20, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான கஹுஞ்சே மைதானத்தில் 15 என மும்பை மற்றும் நவி மும்பையில் மொத்தம் 55 போட்டிகளும் மற்றும் புனேவில் 15 போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. இவை அனைத்தும் லீக் போட்டிகள் மட்டுமே. பிளே-ஆப் சுற்று போட்டிகள் நடக்கும் மைதானங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனினும், போட்டிகளைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மகாராஷ்டிரா மாநில அரசின் கரோனா தடுப்பு விதிகளின்படி அந்த அனுமதி முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 26ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே மாதம் 29ம் தேதி முடிகிறது. இதுதொடர்பாக பேசிய ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், "கரோனா சூழலால் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை போன்ற வெளிநாட்டு மைதானங்களில் போட்டிகளை நடத்த முதலில் ஆராயப்பட்டது. ஆனால், இப்போது நமது நாட்டில் கரோனா நிலை மேம்பட்டுள்ளதை அடுத்து உள்நாட்டிலேயே போட்டிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே போட்டிகளை நடத்த பிசிசிஐ நிர்வாகம் உறுதியாக உள்ளது. தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment