Published : 06 Dec 2021 04:00 PM
Last Updated : 06 Dec 2021 04:00 PM
மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதன் மூலம் கேப்டன் விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றதையடுத்து தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்தது. மும்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றியின் மூலம் உள்நாட்டில் தொடர்ந்து 14-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம் விராட் கோலி அணிக்கு வந்தபின், டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் தலா 50 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதாவது ஒரு வீரராக 3 பிரிவுகளிலும் 50 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
கோலி அணிக்குள் வந்தபின் டெஸ்ட் போட்டிகளில் 50-வது வெற்றி, ஒருநாள் போட்டிகளில் 153 வெற்றிகள், டி20 போட்டிகளில் 59 வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. 3 பிரிவுகளிலும் தலா 50 வெற்றிகளைச் சந்தித்த ஒரே வீரர் விராட் கோலி என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் உள்நாட்டில் தொடர்ந்து 14-வது தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 11-வது டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் இந்திய அணி பெறும் 4-வது டெஸ்ட் தொடர் வெற்றியாகும். கடைசியாகக் கடந்த 1988-ம் ஆண்டு மும்பையில் ரிச்சர்ட் ஹாட்லி தலைமையில் வந்த நியூஸிலாந்து அணி மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்றது. அதன்பின் இதுவரை இந்திய அணியை வென்றதில்லை.
கேப்டன் விராட் கோலியைப் பாராட்டி பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “வாழ்த்துகள் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பிரிவுகளிலும் சர்வதேச அளவில் தலா 50 வெற்றிகளைச் சந்தித்த முதல் வீரர்” எனத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment