Published : 18 Mar 2016 08:36 PM
Last Updated : 18 Mar 2016 08:36 PM
நாளை (சனிக்கிழமை), கொல்கத்தாவில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் ஸ்பின்னர் அஸ்வின், இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ஆஷஸை விடவும் பெரியது என்று கூறியுள்ளார்.
“இந்தப் போட்டி மிகப்பெரியது. எந்த அளவுக்குப் பெரியது என்று கணிக்க முடியவில்லை. ஆஷஸை விடவும் பெரிது என்று கூறலாம். இந்தியர்கள், பாகிஸ்தானியர்களைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தை வெறும் கிரிக்கெட் ஆட்டமாகப் பார்க்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். இது ஏதோ எல்லையோர பகை போல்தான் இருக்கும்.
இந்தக் குறிப்பிட்ட போட்டி மையம் பெறுவதைக் காட்டிலும் இதில் கூடுதலான உணர்வுகள் மோதும் என்றே நான் கருதுகிறேன். ரசிகர்களைப் பொறுத்தவரை நிச்சயம் அதிகம் உணர்ச்சிவயப்படுவார்கள்.
வீரர்களைப் பொறுத்தவரை உணர்ச்சிகளை புறமொதுக்கி விட்டு எவ்வளவு சிறப்பாக ஆட முடியுமோ அவ்வளவு சிறப்பாக ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவாக நாங்கள் அமர்ந்து எங்கள் தலையில் ஒருவருக்கொருவர் ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்றி மோதவிடுவதில்லை. இது குழப்பத்திற்குத்தான் வழிவகுக்கும். ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட திட்டங்கள் உள்ளன. என்னைப் பொருத்தவரை நான் நிறைய திட்டமிடுவேன், இதுதான் எனக்கு கடந்த காலத்தில் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. ஆனால் எளிதாக எடுத்துக் கொள்ளவே முயல்வோம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை நாங்கள் லேசாகவே எடுத்துக் கொள்வோம். பாகிஸ்தானுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியுமே அழுத்தம் நிரம்பியதுதான், இதற்கு நாங்கள் பழகிவிட்டோம்.
முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இங்கிருந்து நாங்கள் வெற்றி பெறத் தொடங்கினால் இந்திய அணி அபாயகரமாக அணியாகவே இருக்கும். எவருக்கும் சாதகம் என்று கூற முடியாது. நாங்கள் 50-50 என்றே தொடங்குவோம், ஆனால் பாகிஸ்தான், வங்கதேசத்தை வீழ்த்தியிருப்பதால் உற்சாகம் கூடுதலாக இருக்கும். ஆனால் நாங்கள் எங்கள் தரத்தை உயர்த்தி எங்கள் திறமைக்கேற்ப ஆடினால் இந்தப் போட்டியையும் வெல்ல முயற்சி செய்வோம்” என்றார்.
பாகிஸ்தான் வியர்வை பிசுபிசுக்க பயிற்சியில் ஈடுபட்ட போது, இந்திய அணி ஏன் பயிற்சி செய்யவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளித்த அஸ்வின், “எங்களை விட அவர்கள் கொஞ்சம் கூடுதலாக உழைத்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை ரிலாக்ஸ் செய்வதுதான் சிறந்தது என்று முடிவெடுத்தோம். கடந்த 3 மாதங்களாக நெரிசலாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறோம். எனவே நாங்கள் சிந்திக்க வேண்டும், என்பதே முக்கியம், ஆனால் பொதுவாக தோவ்லிக்குப் பிறகு கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு போட்டியன்று களைப்படைவது நடந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். இதுதான் நாங்கள் பயிற்சி செய்யாததன் உட்கருத்து.
உலகக்கோப்பை போட்டிகளில் உத்வேகம் பெறுவது முக்கியம். நாங்கள் ஈடன் கார்டன்ஸ் போட்டியிலிருந்து உத்வேகம் பெறுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT