Published : 22 Mar 2016 02:58 PM
Last Updated : 22 Mar 2016 02:58 PM
டி20 உலகக்கோப்பையை இந்தியா 2-வது முறையாக வெல்வது 99% உறுதி என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அவர் கூறும்போது, “தொடர் தொடங்கும் முன்பு, நான் இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழையும் என்று கூறினேன். இப்படியாகத்தான் இப்பவும் உணர்கிறேன். சரி. நியூஸிலாந்திடம் தோற்றோம், 2011-லும் இப்படித்தான் நடந்தது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்தோம் ஆனால் கோப்பையை வென்றோம் அது போலவே இப்போதும் நடைபெற வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
தற்போது விராட் கோலி ஆடிவரும் விதம் அற்புதமாக உள்ளது. அவர் பேட் செய்யும் போது டிவி-யிலிருந்து கண்ணை அகற்ற முடியவில்லை. என் குழந்தைகள் கூட விராட் கோலியை மிகவும் விரும்பிப் பார்க்கின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது நான் வர்ணனையில் குறிப்பிட்டேன், ஹர்பஜன் சிங் விளையாட வைக்கப் படவேண்டும். அவர்தான் நம் அணியின் அனுபவமிக்க ஸ்பின்னர், பிட்சில் பந்துகள் திரும்பும்போது ஹர்பஜன் விளையாடியே ஆக வேண்டும். அவர் 4 ஓவர்களையும் வீசினால் அணிக்கு அது பெரிய அளவில் உதவும்.
ஜடேஜா அணியில் நீடிக்க வேண்டும். நன்றாக வீசுகிறார், அவர் நம்பர் 6-ல் தேவைப்படுகிறார். அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் அழைக்கப்படுவதற்கான தேவை இப்போதைக்கு இருப்பதாக நான் கருதவில்லை.
தோனியிடன் இன்னமும் 4-5 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மீதமுள்ளது. அவருக்கு வயது 34. சச்சின் 40 வயது வரை ஆடினார். தோனியும் 2019 உலகக்கோப்பை வரை ஆடி அவரது உச்சத்தில் ஓய்வு பெற வேண்டும்” என்றார்.
சேவாகிடம் அவரது பாணி பேட்டிங்கை முன்னெடுத்துச் செல்லப்போகும் இந்திய வீரர் யார் என்று கேட்ட போது, “இப்போதைக்கு ஒருவரும் இல்லை, எதிர்காலத்தில் பார்ப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT