Published : 02 Dec 2021 03:45 PM
Last Updated : 02 Dec 2021 03:45 PM
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் விராட் கோலி நீடிப்பாரா அல்லது இல்லையா என்பது இந்த வாரம் தேசிய தேர்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆப்பிரிக்கத் தொடர் நடக்குமா அல்லது ரத்தாகுமா என்பது குறித்து இதுவரை பிசிசிஐ தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆதலால், இந்த வார இறுதியில் தேர்வுக்குழு கூடி தென் ஆப்பிரிக்கத் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய இருக்கிறது. அதில் ஒரு அணிக்கென தனியாக கேப்டன் தேவையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரையே பிரதானமாக வைத்து இந்திய அணி செயல்படுகிறது. அடுத்த ஆண்டில் இந்தியஅணி மொத்தம் 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கிறது. அதில் 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தில் 3 போட்டிகளும், இந்தியாவில் 3 போட்டிகளும் நடக்கின்றன. இந்த 9 போட்டிகளுக்கு மட்டும்தனியாக ஒரு கேப்டன் நியமிக்கப்பட வேண்டுமா என்ற கருத்து நிலவுகிறது.
தென் ஆப்பிரிக்கத் தொடரில் இந்திய அணி விளையாடும் பட்சத்தில்20 முதல் 23 வீரர்கள் வரை டெஸ்ட், ஒருநாள்,டி20 தொடருக்காகத் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பிசிசிஐ தரப்பில் தற்போது இரு கருத்துக்கள் நிலவுகின்றன. முதலாவது, அடுத்த ஆண்டு நடக்கும் 9 ஒருநாள் போட்டிகளுக்குமே கோலியை கேப்டனாக செயல்பட அனுமதிப்பது, 2-வதாக ஒயிட்பால் போட்டிகளுக்கு இரு கேப்டன்களாக ரோஹித் சர்மா, கோலி என இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் விராட் கோலி, ஒருநாள்,டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை நியமிக்கலாம் என கருத்து இருக்கிறது.
ஆனால், கோலி ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக நீடிப்பதும், அல்லது டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருப்பதும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா இருவரின் முடிவைப் பொறுத்தே அமையும்.
பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ தென் ஆப்பிரிக்கத் தொடருக்கான இந்திய அணி அடுத்தசில நாட்களில் அறிவிக்கப்படும். அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம், மற்றவகையில் இந்திய அணி தயாராக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கத் தொடருக்குச் செல்லுங்கள் என மத்திய அரசு தெரிவித்தால், என்ன செய்வது அதனால் தேர்வுக்குழுவும் வீரர்களைத் தேர்வு செய்ய தயாாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment