Published : 10 May 2021 02:43 PM
Last Updated : 10 May 2021 02:43 PM
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
இது தொடர்பாக பியூஷ் சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில், “ என்னுடைய அன்புக்குரிய தந்தை பிரமோத் குமார் சாவ்லா இன்று காலை காலமானார். கரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் மீண்டபோதிலும், கரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகளால் சிரமப்பட்டு வந்த நிலையில் என் தந்தை காலமானார். இந்தக் கடினமான நேரத்தில் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். என் தந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “தனது தந்தை பிரமோத் குமார் சாவ்லாவை இழந்த பியூஷ் சாவ்லாவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடனும், உங்கள் குடும்பத்துடனும் இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
32 வயதான பியூஷ் சாவ்லா இதுவரை இந்திய அணிக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 136 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 445 விக்கெட்டுகளை சாவ்லா கைப்பற்றியுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பியூஷ் சாவ்லா ஒரு போட்டியில்கூட களமிறங்கவில்லை.
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ என்னுடைய அன்பு சகோதரா பியூஷ் சாவ்லா. உங்கள் தந்தை உயிரிழந்த செய்தியால் வேதனை அடைந்தேன். உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தக் கடினமான நேரத்தில் உங்களுக்கு அமைதி ஏற்பட நான் பிரார்த்திக்கிறேன். கரோனா மற்றொரு உயிரையும் எடுத்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியாவின் தந்தை கஞ்சிபாய் சக்காரியா நேற்று கரோனாவால் காலமானார். முன்னதாகக் கடந்த வாரம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வேதா கிருஷ்ணமூர்த்தி தனது சகோதரி வத்ஸலாவை கரோனாவுக்கு பலி கொடுத்தார். தனது சகோதரியை இழப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான், தனது தாயையும் வேதா இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment