Published : 27 Feb 2021 05:36 PM
Last Updated : 27 Feb 2021 05:36 PM
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் தரத்தை ஆய்வு செய்யும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) நடவடிக்கையிலிருந்து பிசிசிஐ தப்பித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் தரமான ஆடுகளத்தை அமைக்கிறோம், பேட்டிங்கிற்கும், பந்துவீச்சுக்கும் சமஅளவு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை அமைக்கிறோம் என பிசிசிஐ உறுதியளித்துள்ளதால், ஐசிசி ஆய்விலிருந்து பிசிசிஐ தப்பித்துள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி 4-வது டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.
ஆனால், 4-வது போட்டிக்கு ஆடுகளத்தை தரமானதாக பேட்டிங்கிற்கு சாதகமான அமைத்தால், இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கடும் போட்டியுள்ளதாகவே ஆட்டம் அமையும். இதனால் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
அகமதாபாத்தில் நடந்த 3-வதுடெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்றகணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்கிய 2-வது நாளிலேயே ஆட்டம் முடிந்தது. இதனால் ஆடுகளத்தின் தரம் குறித்து இங்கிலாந்து வீரர்களும், இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை ஆடுகளத்தின் தரம் குறித்து இங்கிலாந்து அணி சார்பிலும், நிர்வாகிகள் சார்பிலும் எந்தவிதமான புகாரும் ஐசிசியிடம் அளிக்கவில்லை.
இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் " 4-வது டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளம் ஓரளவுக்கு பவுண்ஸருக்கும், பேட்டிங்கிற்கும் சாதகமானதாக மாற்றப்பட்டு இரு அணிகளும் நல்லஸ்கோர் செய்யும் விதத்தில் இருக்கும்.
ஒரே மைதானத்தில் இரு போட்டிகள் நடத்தப்படும்போது, ஒருபோட்டியின் முடிவை மட்டும் ஒதுக்கிவைத்துவிட முடியாது கடைசி டெஸ்ட்போட்டியும் முடிந்தபின், ஐசிசி நடுவர் ஸ்ரீநாத் அறிக்கைக்குப்பின்புதான் ஐசிசி நடவடிக்கை இருக்கும். இப்போதுவரை இங்கிலாந்து அணி சார்பில் ஐசிசியிடம் ஆடுகளம் குறித்து எந்தப்புகாரும் அளிக்கவில்லை.
ஒரே மைதானத்தில் ஒரு ஆடுகளம், மோசமாகவும், மற்றொன்று மோசமானதாகவும் இருந்தால், ஐசிசி நடவடிக்கை பெரும்பாலும் எடுக்க வாய்ப்பில்லை. ஆதலால் 4-வது டெஸ்ட் போட்டிக்குஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகத்தான் இருக்கும். இந்திய அணியும் 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல முடியும்.
பிங்க் பந்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட்போட்டியும் நன்றாகவே முடிந்துள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நேராக வந்த பந்தை சமாளித்து பேட் செய்ய முடியாமல்தான் ஆட்டமிழந்தார்கள்.
3-வது டெஸ்ட் போட்டி பந்தைப் பொறுத்த விஷயம்தான், ஆடுகளத்தை பொறுத்து அல்ல. இதுபோன்ற ஆடுகளங்கள் சில நேரங்களில் சில நேரங்களில் இந்திய அணிக்கே திருப்பித்தாக்கிவிடும் என்பதை பிசிசிஐக்கு நன்கு தெரியும்" எனத் தெரிவி்த்தார்.
4-வது டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் சாதகமாக அமைக்கப்பட்டால் ஆட்டம் யார் பக்கம் இருக்கும் என்பது இப்போதே யூகிக்க முடிகிறது. ஏனென்றால், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தனிப்பட்ட காரணங்களால் 4-வது டெஸ்ட் போட்டிக்கு விடுவிக்கப்பட்டார். பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்படவே அதிகமான வாய்ப்புள்ளது.
அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், ஆன்டர்ஸன், பிராட் இருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும்பலமாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment