Last Updated : 19 Aug, 2020 08:31 AM

 

Published : 19 Aug 2020 08:31 AM
Last Updated : 19 Aug 2020 08:31 AM

ரோஹித் சர்மா, தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உள்பட 5 பேர் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரை; ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமே அர்ஜூனா விருதுக்கு சிபாரிசு

தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்க வேலு : கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்கு முதல்முறையாக 5 வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினிஷ் போகட், மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், தமிழகத்தின் மாற்றுத்தி்றனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மாணிக் பத்ரா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ராஜீவ் கேல்ரத்னா விருது சிந்து, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிசுடும் வீரர் ஜித்துராய், மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த முறை 5 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் அர்ஜூனா விருதுக்கு ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறுபிரிவு விளையாட்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருது வழங்குவதற்காக 12 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக் குழுவில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றனர். இந்த குழுவினர் நேற்று இறுதிப்பட்டியலைத் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பினர்.

இதில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் 4-வது வீரர் ரோஹித் சர்மா ஆவார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதை 1998-ல் முதன்முதலாக சச்சினும், 2007ம் ஆண்டில் தோனியும், 2018-ல் கோலியும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவும் சேர்ந்து பெற்றனர்.

வினிஷ் போகட்

சர்வதேச அளவில் சிறப்பாக பேட்டிங்கில் ஜொலித்து ரன்களைக் குவித்ததால் ரோஹித் சர்மாவும், கடந்த 2018- காமென்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெண்கலப்பதக்கங்களை வென்றதற்காக வினீஷ் போகட்டும் கேல் ரத்்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் தங்கவேலு மாரியப்பன் 2016-ம் ஆண்டு ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் டி42 பிரிவு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார். அவரின் சாதனையைப் பாராட்டி கேல்ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இசாந்த் சர்மா

2018-ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் தங்கம்,ஆசிய விளையாட்டில் வெண்கலம் ஆகியவற்றை டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா பெற்றிருந்தார், ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பாலின் செயல்பாடும் குறிப்பிடத்தகுந்ததாக இருந்ததால், கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்

அர்ஜூனா விருதுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா ஒருவர் மட்டுமே கிரிக்கெட் பிரிவில் பரிந்துரைப்பட்டுள்ளார். 97 டெஸ்ட், 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இசாந்த் சர்மா 400-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x