Published : 31 Oct 2019 05:18 PM
Last Updated : 31 Oct 2019 05:18 PM

இந்திய அணியை வீழ்த்த வங்கதேசத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு: பிளான் போட்டுக் கொடுத்த விவிஎஸ் லக்‌ஷ்மண்

மும்பை


டி20 தொடரில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு வங்கதேச அணிக்கு கிடைத்துள்ளது என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்

வங்கதேச அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுடன் 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் வIங்கதேச அணி விளையாட உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் முதலாவது டி20 போட்டியும், நவம்பர் 7-ம் தேதி ராஜ்கோட்டிலும், 11-ம் தேதி நாக்பூரிலும் போட்டிகள் நடக்கின்றன.

இதைத் தொடர்ந்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22-ம் தேதி பகலிரவு டெஸ்ட் போட்டியும் நடக்க உள்ளது.

இந்நிலையில், தனியார் சேனல் ஒன்றுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " வலிமையான பேட்டிங் வரிசை இருந்தபோதிலும் கூட இந்திய அணியை டி20 தொடரில் அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவதற்கு வங்கதேச அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

வங்கதேசம் அணியின் பந்துவீச்சு வலிமையாக இருப்பதால், இந்திய அணியின் பேட்ஸமேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். குறிப்பாக முஷ்தபிசுர் ரஹ்மான் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள். அதேசமயம், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு வங்கதேச அணியோடு ஒப்பிடுகையில் அனுபவமற்றதாக இருக்கிறது.

புதிய பந்தில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணிக்கு நெருக்கடி அளி்க்க முடியும். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி இல்லாதது பெரும் பலவீனம், நடுவரிசையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, அனுபவமற்றதாகவே இருக்கிறது.

இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள்தான் பொறுப்பேற்று தங்கள் அணிக்கான வெற்றியை உறுதி செய்ய வேண்டும். சுழற்பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சாஹல் மட்டுமே சுழற்பந்துவீச்சில் முக்கியமானவர்களாக இருப்பார்கள். போட்டி நடக்கும் 3 மைதானங்களும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்கள் என்பதால், சுந்தர், சாஹலுக்கு இது ஒத்துழைக்கும். இந்திய அணியில் அனுபவமற்ற பந்துவீச்சு வரிசை இருப்பதால், சாஹல் 3 போட்டிகளிலும் விளையாட வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்

அதேசமயம் குர்னல் பாண்டியா போன்ற மற்ற வீரர்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு அணிக்கு வெற்றித் தேடித்தர வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தான் வெல்லும்.

ரோஹித் சர்மா, ஷிகர் தவண் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்தாலும் கூட, இந்திய அணி பந்துவீச்சை நம்பி களமிறங்காது, பேட்டிங் வரிசையை நம்பித்தான் களமிறங்கும் " எனத் தெரிவித்தார்


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x